Saturday 10 December 2011

தனிப்பிரிவுக்கு (special branch C.I.D) மாறுதல்:

அப்போது.....

                           தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனிக்கு வந்து அதன் துணைத்தலைவர் திரு M.A.ராமசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் ஒர்க்ஸ் மேனேஜர் திரு சித்தாராமையா அவர்களையும், ஆபீஸ் சூப்பிரண்டு திரு ஹரிஹரன் அவர்களையும் சந்தித்தேன். அவர்களது அறிவுரையின்படி பாதுகாப்பு தலைவர் திரு B.J.கருணாகரன்(A.D.S.P.,Reted.) அவர்களை சந்தித்தேன். அவர் நான் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் டூட்டி  செய்யும்போது தக்கலை காவல் துணை கண்காணிப்பாளராக இருதார்.அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். கம்யுனிஸ்ட்  சங்க தலைவர் திரு S.I.சங்கரன், I.N.T.U.C.சங்க தலைவர் திரு கந்தசாமி மற்றும் தி.மு.க.சங்க தலைவர் ஆத்தூர் சண்முகம் ஆகியோர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி விசாரித்தேன்.ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு தங்கரோஸ் அவர்களையும் சந்தித்து தொழிலாளர்களின் நிலைமை பற்றி சொன்னேன். மாவட்ட  தனிப்பிரிவு  அலுவலகத்துக்கும் அப்போதைக்கப்போது தொழிலாளர்களின் நிலவரம் பற்றி தகவல் சொல்லிவந்தேன்.

           மறுவாரம்  தனிப்பிரிவு வாராந்திர  கூட்டத்திற்கு  சென்றேன். அங்கு தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அப்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி.துரைராஜ் M.A,B.L.,I.P.S. அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். அவர்களின் முகாம் எழுத்தர் திரு பி.பெரியசாமி அவர்களை சந்தித்தேன் . அவர்கள்  தாரங்கதாரா  கம்பனியில் துணைத்தலைவர் திரு எம்.எ.ராமசாமி அவர்களின் தனி உதவியாளர் திரு வரதன் எனது நண்பர் என்றும் நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள் என்று சொன்னார்கள். வாராந்திர கூட்டத்திற்கு தூத்துக்குடி தனிபிரிவு உதவி ஆய்வாளர் திரு ஜி.ஆஸ்டின், தலைமை காவலர் திரு D.A.செல்லப்பா, கோவில்பட்டி உதவி ஆய்வாளர் திரு நாகலிங்கம், தலைமைக்காவலர் திரு செல்லத்துரை பாண்டியன்,அம்பாசமுத்திரம் உதவி ஆய்வாளர் திரு வேலுசாமி,தலைமை காவலர் திரு சுப்பையா பாண்டியன், திருநெல்வேலி உதவி ஆய்வாளர் திரு பார்த்தசாரதி, தலைமைக்காவலர் திரு மலையாண்டி தேவர், திருவைகுண்டம் உதவி ஆய்வாளர் திரு U.சின்னசாமி ஆகியோர் வந்திருந்தார்கள். அந்த வாரத்தில் நடந்த தனிப்பிரிவு செய்திகளை அறிக்கை செய்து அறிவுரைகள் பெற்றோம்.

காவலர்  சீருடை  
           
                      ஒருசமயம் ஆறுமுகநேரி கெமிகல் கம்பெனியின் முன்னால் ரோட்டின் ஓரத்தில் இருவர் சண்டை போட்டு ஒருவனை அடித்து ரத்த காயங்களுடன் போட்டுவிட்டு போய்விட்டான்.அவன் ரோட்டோரத்தில் அழுது கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த P.R.C.செக்குரிட்டி ஆபீசர் நின்று அவனை பார்த்திருக்கிறார். அவன் அய்யா என்னை காப்பாற்றுங்கள் என்று அழுதிருக்கிறான். அவர் காக்கி சட்டை, பேன்ட் 
போலீஸ் ஆபீசர் தொப்பி, ஸ்டார், எல்லாம் அணிந்திருந்ததை பார்த்த அந்த காயமடைந்த நபர் அந்த செக்குரிட்டி ஆபிசரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று நினைத்துகொண்டார். அந்த செக்குரிட்டி ஆபிசர் நேராக காவல்நிலையம் சென்று விஷயத்தை சொல்லிவிட்டு போனார். அப்பால் போலிசார் வந்து அந்த நபரை கூட்டிசென்று வழக்கு பதிவு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் மறுநாள் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு R.S.பாண்டியன் அவர்கள் மருத்துவமனைக்கு போய் அந்த காயம்பட்ட நபரை விசாரித்தார்கள். அந்த நபர், "நான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வழியாக சப் இன்ஸ்பெக்டர் ரோட்டில் நின்று பார்த்துவிட்டு போய்விட்டார்" என்று சொல்லிவிட்டார். உடனே சப் இன்ஸ்பெக்டர் திரு தங்கரோஸ் அவர்களை ஆய்வாளர் கடுமையாக சாடினார். சப் இன்ஸ்பெக்டர் எவ்வளவோ எடுத்துசொல்லியும் ஆய்வாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் போலீஸ் தவிர வேறு எந்த அலுவலரும் காக்கி யூனிபாரம் போடக்கூடாது என்று சர்குலர் விடப்பட்டது.

ஆறுமுகநேரியில்        

               நான் மனைவி குழந்தையுடன் ஆறுமுகநேரியில் மாமனார் விட்டில் தங்க மிகவும் வசதியாக இருந்தது. மேலும் தனிபிரிவு ஆய்வாளர் திரு விஜயரமச்சந்திரன் அவர்கள் மனைவியின் பெரியம்மா வீடு ஆறுமுகநேரி  ராஜாமன்னியபுரத்தில் இருந்தது. அவர்கள் மக்கள் திரு செல்ல்லப்பா, திரு கங்கை ஆதித்தன், திரு A.V.ரவிபாண்டியன் (இவர் பின்னாளில் நீதிபதியாகி மறைந்தார்.) ஆகியோர் நல்ல தகவல்களை தருவார்கள். திரு கங்கை ஆதித்தன் அவர்கள் சங்கரேஸ்வரி மெடிக்கல் வைத்திருந்தார்கள். அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு நான் அடிக்கடி சென்று தகவல்களை சேகரித்து வருவேன். தட்ஷனமார நாடார் சங்க தலைவர் திரு P.S.ராஜா பலவேசமுத்து நாடார் அவர்கள் மக்கள் திரு விவேகானந்தன், திரு சதானந்தன் ஆகியோர்களும் நல்ல பல தகவல்களை தருவார்கள். மேலும் பேயன்விலையில் திரு பட்டுராஜன் அவர்களும் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள்.

                     திருசெந்தூரில் காவலர் காலனியில் தலைமைக்காவலர் இல்லம் எனக்கு ஒதுக்கப்பட்டது. மறுநாள் மிளவிட்டான் சென்று அம்மாவை அழைத்துக்கொண்டு ஆறுமுகநேரி வந்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு காவலர் குடியிருப்பில் குடியேறினோம்.

                ஒருநாள் காவல்நிலையத்திலிருந்து தொலைபேசியில் மாவட்ட தனிப்பிரிவு ஆபிசுக்கு சில முக்கிய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் D.S.P, திரு பால் தாமஸ் அவர்கள் வந்தார்கள். உடனே அவருக்கு மரியாதையை செய்துவிட்டு மிண்டும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். உடனே "அவர் மிகவும் கோபமாக என்னய்யா தகவல் சொல்லிக்கொண்டிருக்கிறாய். அதெல்லாம் வெளியே எங்கேயாவது இருந்து சொல்லவேண்டும்" என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் ஸ்ரீவைகுண்டம் சென்று தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு செல்லமுத்து பாண்டியன் அவர்களை சந்தித்து தனிப்பிரிவு தகவல்களை சொல்லிவிட்டு D.S.P.திரு பால் தாமஸ் அவர்கள் கோபப்பட்ட விசயத்தையும் சொன்னேன். அவர் உடனே மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளரிடம் சொல்லிவிட்டார்.

             ஒரு வாரம் கழித்து திருச்செந்தூர் காவல் நிலையதிலிருந்து தனிப்பிரிவுக்கு மாற்றி எனக்கு திருசெந்தூரை தலைமையிடமாக இருக்கும்படி உத்தரவு வந்துவிட்டது. உத்தரவு கிடைத்த மறுநாளே திருச்செந்தூர் காவல் நிலையத்திலிருந்து  ரிலிவாகிவிட்டேன். எனது பணி திருசெந்தூர் சர்க்கிளுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்பிரிவு தகவல்களை சேகரித்து அனுப்பவேண்டும். கருமமே கண்ணாயினர் என்ற பழமொழிக்கிணங்க எனது பணியை திறம்பட செய்துவேந்தேன். 

தெய்வம் 

                     ஒரு சமயம் முருகன் கோயிலில் சின்னப்பா தேவர் அவர்களின் படமான தெய்வம் திரைப்பட படப்பிடிப்பு நடந்தது. அதைபர்க்க காவலர் குடி இருப்பிலுள்ள அனைவரும் போனார்கள் என்று என் மனைவி சொன்னாள். அன்று இரவு மனைவியுடன் படப்பிடிப்பை காண்பதற்கு சென்றிருந்தேன்.

                                                                                            அப்போது....

Friday 2 December 2011

திருச்செந்தூர் மாற்றம்!

அப்போது .....

நான் பயத்துடனே அவர்களை சந்தித்தேன். அவர்கள் முதலில் என்னை  நலம் விசாரித்தார்கள். பிறகு என்னிடம் "நீ  தனிப்பிரிவு தலைமை காவலராக வந்துவிடு. உன்னை திருசெந்தூர் மாற்றுகிறேன்" என்று சொன்னார்கள். "அய்யா!  ரொம்ப  சந்தோசம். தங்களது பொறுப்பின் கீழ் வேலை செய்ய நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டு சந்தோசமாக புளியரை வந்தேன். மனைவியிடம் சொன்னவுடன் அவளுக்கு நம் ஊர் பக்கத்திலேயே மாறுதல் கிடைப்பது பற்றி  ரொம்ப சந்தோசம். 

                    ஒரு வாரத்தில் மாறுதல் ஆர்டர் வந்தது. மாறுதல் ஆர்டர் கிடைத்த மறுநாளே புளியரையிலிருந்து ரிலிவானேன்.பெட்டி படுக்கையெல்லாம் கொஞ்சம்தான். எல்லாம் எடுத்துக்கொண்டு பஸ்சிலேயே புறப்பட்டோம்.  ஆறுமுகநேரி வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு அப்பால் தூத்துக்குடிக்கு போனேன். சித்தி, சித்தப்பா எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான்  போய் அம்மா, அண்ணன் ராமர், லக்ஷ்மணன் எல்லோரிடமும் சொல்லி விட்டு இரவு தங்கினேன். ஏழு நாட்கள் லீவு முடிந்து திருசெந்தூர் வந்து உதவி ஆய்வாளர் திரு தாமஸ் மாசில்லாமணி அவர்களிடம் ஆஜராகி பணிக்கு ரிப்போர்ட் செய்துகொண்டேன். ஆய்வாளர் திரு R.S.பாண்டியன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். இவர் கொஞ்சம் கறாரான ஆபிசர்.சில நேரம் அதிகாரிகளை ஏடாகூடமாக பேசிவிடுவார். 

                    அப்பொழுது சர்க்கிள் ரைட்டராக அம்மன்புரம் புதுகுடியை சேர்ந்த திரு சண்முகவேலு என்பவர் இருந்தார். நான் வேலூரில்  காவலர் பயிற்சியில் இருக்கும்போது இவர் என்னுடன் பயிற்சியில் இருந்தார். அப்பொழுது நல்ல பழக்கம். மேலும் எனது அக்காள் திருமதி சண்முகக்கனியின் கணவர் திரு முனியசாமி அவர்களின் நெருங்கிய உறவினர் . ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும்படி உத்தரவிட்டார்கள் . அதன்படி தலைமைக்காவலர் ரைட்டராக பணியாற்றினேன் . ஒரு மாதம் கழித்து  சர்க்கிள் ரைட்டர் சண்முகவேல் ஆய்வாளரிடம் லீவு கேட்டுள்ளார். மாதாந்திர குற்றகூட்டம் முடிந்தபின் லீவில் போ என்று ஆய்வாளர் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திலேயே ரைட்டருக்குத்தான் அதிக பொறுப்பு. அதனால்தான் சர்க்கிள் தலைமையிடத்து காவல் நிலையங்களில் தலமைகாவலர்களை ரைட்டராக நியமிப்பார்கள். காவலர்களுக்கு சம்பளம் கொடுப்பது பணபதிவேடு எழுதுவது எல்லாம் ரைட்டர்தான் செய்யவேண்டும். சர்க்கிள் ரைட்டருக்கு சம்பளம் கொடுத்து விடாதே. மாதாந்திர குற்றகூடம் முடித்தபின் கொடு என்று ஆய்வாளர் அவர்கள் என்னிடம் சொல்லிருந்தார். ஆனால் சர்க்கிள் ரைட்டர் முன்னாடியே சம்பளத்தை ஆய்வாளர் வாங்கிக் கொள்ளசொன்னார் என்று தவறாக சொல்லி சம்பளத்தை வாங்கிசென்றுவிட்டார். அதற்காக ஆய்வாளர் என்னை மிகவும் கடிந்துகொண்டார்.நானும் சர்க்கிள் ரைட்டரை காட்டிக் கொடுக்காமல் மவுனமாக இருந்துவிட்டேன்..

தாரங்கதார கெமிக்கல் கம்பெனி பிரச்சனை:


                       ஆறுமுகநேரி சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனியில் 1969 போனஸ் பிரச்சனையில் திரு எஸ்.ஐ .சங்கரன் தலைமையில் உள்ள   கம்யுனிஸ்ட் சங்கத்தினர் கம்பெனி நிறுவனர் திரு எஸ்.கே.ஜெயின் அவர்களை அவர் அறையிலேயே ஏழு மணி நேரம் பூட்டி வைத்து  கேரோ செய்து அவரை போன்கூட பேச அனுமதிக்காமல் இருபது சதம் போனஸ் வேண்டும் என்று கையெழுத்து வாங்கிவிட்டார்கள். மறுநாள் சென்னைக்கு I.G. திரு F.V.அருள் அவர்களுக்கு போன் செய்து கம்பெனியில் நடந்த போனஸ் விவரங்களை சொன்னார்கள். அவர்கள் உடனே திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனே தாரங்கதாரா கெமிகல் கம்பெனிக்கு ஒரு தனிப்பிரிவு தலைமை காவலரை நியமித்து அங்கு தொழிலாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவேண்டும் என்று உந்தரவு போட்டார்கள். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து என்னை அந்த டூட்டிக்கு  நியமித்து உத்தரவு  வந்தது. ஆறுமுகநேரி பக்கத்தில் உள்ள ஊர் என்பதால் மிகவும் சந்தோசம்.

                                                                                         அப்போது.........

Monday 14 November 2011

சினிமா படப்பிடிப்பு!

அப்போது...

                        தலையில் எந்த அடியும் படவில்லை. என்ன ஆச்சர்யம் அவன் விழுந்த அந்த இடத்தில் அந்த பாறை சற்று கீழே அமுங்கி இருந்தது. அதுபோல குழந்தையும் சிறிது நேரத்திலேயே சிரித்து விளையாட ஆரம்பித்தான். இறைவனுக்கு நன்றி.

மீண்டும் பதவி உயர்வு !


                           1969 ஜனுவரியில் எனக்கு மீண்டும் தலைமைக்காவலர் பதவி உயர்வு வந்தது. இப்பொழுது நான்  புளியரையில் அரிசி கடத்துபவர்களை கண்காணிக்கும் தணிக்கை சாவடிக்கு மாற்றப்பட்டேன். மாறுதல்  ஆர்டர் கிடைத்த மறுநாளே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று ஊருக்கு புறப்பட்டேன். ஆறுமுகநேரி போய் பணியில் சேருவதற்காக வழங்கும் விடுப்பு (Joining Time leave) ஏழு  நாட்களையும் ஆறுமுகநேரியிலும்,மீளவிட்டானிலும் கழித்துவிட்டு நான்மட்டும் புளியரைக்கு சென்றேன். அங்கு பணியில் சேர்ந்ததும் புளியரை மலைக்குகைக்குள் ரயில் செல்லும் பாதை (Tunnel Check post) ஆரம்பிக்கும் இடத்தில் மலைக்காட்டுக்குள் ஒரு ஓலை செட்டு அமைத்து அரிசியை கேராளாவுக்கு கடத்துபவர்களை கண்காணிக்கவேண்டும். என்னுடன் காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன், பிச்சையா தேவர் ஆகியோரும் இருந்தார்கள். அவ்வப்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் திரு ஹென்றி பாண்டியன் அவர்கள் எங்களை செக் செய்ய வருவார்கள். அரிசி கடத்துபவர்கள்
இரவில் மலைமேல் கரடு முரடான வழியாகத்தான் கடத்துவார்கள். 

                     புளியரையில் திரு சுப்பையா தேவர் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வீடு பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊரில் போய் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய கொஞ்சம் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

செக் போஸ்ட் வேலை!  
                   
                     ஒருநாள் காவலர் பிச்சையா தேவரை செக் போஸ்டில் வைத்துவிட்டு நானும், காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன் ஆகியோர் மலை உச்சிக்கு போய் இரவு ஒரு மணிக்கு பதுங்கி இருந்தோம். காவலர் கோதண்டராமன் ஒரு பீடிபிரியர் புகை பிடிக்காமல் இருக்கமாட்டார். இந்த பீடிப்புகை வாசனையை உணர்ந்தே கடத்தல்காரர்கள் ஓடிவிடுவார்கள். அன்றும் அதைப்போல் ஓடிவிட்டனர்.அவர்கள் கொண்டுவந்த அரிசி மூட்டைகளை ஆங்கங்கே போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.              


பிடிபட்ட அரிசி மூட்டைகள்!

                                   விடியும்வரை மலையிலேயே காத்திருந்துவிட்டு காலையில் புளியரைக்கு போய் கூலியாட்களை அழைத்துவந்து அரிசிமூட்டைகளை அந்த மலையின் செடி கொடிகளுகிடையில் தேடி எடுத்தோம். ஏழு சிறு மூட்டைகள்தான் கிடைத்தது. அவைகளை எடுத்துவந்து கோர்ட்டுக்கு அறிக்கை தயார்செய்து செங்கோட்டை கோர்ட்டுக்கு கொண்டுபோனோம்.கனம் கோர்ட்டார் அவர்கள் "ஏன் கைதிகளை பிடிக்கவில்லை" என்று கேட்டார். இரவு நேரமானதாலும் மலையுச்சி செடிகொடிகள் நிறைந்த காடு என்பதாலும் அவர்கள் தப்பிவிடுகிறார்கள். என்று சொன்னேன். உடனே கோர்ட்டார் அவர்கள் என்னை சிறிது நேரம் உற்று கவனித்தார். திடீரென்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார். 

                               சற்று நேரத்தில் மதிய இடைவேளையின் போது கோர்ட் சேவகர் வந்து "உங்களை ஐயா அழைக்கிறார். வாருங்கள்" என்று அழைத்தார். கணம் நீதிபதி ஐயா அவர்கள் எதற்காக என்னை அழைக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. கோர்ட் சேவகரை வருகிறேன் போங்கள் என்று அனுப்பிவிட்டு குழப்பமாக அவரை சென்று பார்த்தேன்.

நீதிபதி  ஐயா!

                     அப்போது அவர் " நீர் புதுக்கடையில் இருந்த ராமசாமி தானே! என்னை தெரியவில்லையா ? என்று கேட்டார்.  அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழித்துறை கோர்ட்டில் இணையம் புத்தன்துறை வழக்கில் எதிரிகளுக்காக வாதாடிய வக்கீல் திரு தியாகராஜன் என்பது தெரிந்தது. "ஆ! ஐயா!  நீங்களா! எப்போது நீதிபதியானீர்கள்?"  என்றேன்.  உடனேயே என்னை உட்காரவைத்து புதுக்கடை SI சங்கரபாண்டியன் மற்றும் ஆய்வாளர் பாலகிருஸ்ணன் நாயர் ஆகியோர்களை நலம் விசாரித்தார். அப்பால் அரிசி மூடைகளை ஒப்படைத்துவிட்டு புளியரைக்கு வந்தேன். 

சினிமா படப்பிடிப்பு!

                    ஒரு நாள் புளியரை ரயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு நடக்கிறதாம் போய் பார்ப்போமே என்று என் மனைவி கூறினாள். சரி என்று குழந்தையை எடுத்துகொண்டு  புளியரை ரயில் நிலையம் போனோம். அங்கே இந்தி நடிகை ஹேமமாலினி நடித்த ஒரு இந்தி படப்பிடிப்பை பார்த்தோம். தெரிந்த போலீஸ்காரர்கள்  உதவியுடன் மிகவும் அருகில் நின்று படப்பிடிப்பை ரசித்துக்கொண்டிருந்தோம்.  எனது குழந்தையை பார்த்த நடிகை ஹேமமாலினி அருகில் வந்தார் குழந்தையை தூக்க முயற்சித்தார்.  அவன் போகவில்லை .  அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி எல்லோரிடமும் அதை சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தாள்.

                      அன்று மலையில் செங்கோட்டை அருகிலுள்ள திருமலை குமாரசாமி கோயிலுக்கு போனோம். எனது இரண்டு வயது மகன் முத்துகுமரன் அப்போதெல்லாம் கோவிலை சுற்றி வருவதென்றால் அவன் மிகவும் வேகமாக "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே  தத்தித்தத்தி நடந்து கோவிலை சுற்றி வருவான். கர்ப்பகிரகத்தில் சாமிக்கு மகன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.

புதிய குழப்பம்!.
                      மறுநாள் நான் டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தேன் அப்பொழுது ஏன் மனைவி சொன்னாள். ஒரு காவலர் திருநெல்வேலி மாவட்ட தனிபிரிவில் இருந்து வந்ததாகவும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் உடனேயே என்னை வரச்சொன்னதாக சொல்லிவிட்டு சென்றதாக சொன்னாள். என்ன விஷயம் என்று சொல்ல வில்லை . அன்று இரவு முழுதும் தூக்கமே இல்லை . ஒரு வேளை அம்பாசமுத்திரம் சர்க்கிள் ஆபீசில் நாம் எழுத்தராக இருக்கும்போது  பதிவேட்டில் ஏதேனும் தப்பு நடந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்து வருந்திகொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும். கவலைப்படாதீர்கள் என்று சொன்னாள் காலையில் முதல் பஸ்ஸில் திருநெல்வேலி புறப்பட்டேன். திருநெல்வேலி தனிப்பிரிவு அலுவலகம் சென்று ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்தேன்.

                                                                                                                 அப்போது..........

Saturday 12 November 2011

மகன் முத்துக்குமரன் எழுந்தான்! !

அப்போது.....
                       
                         சிறிது நேரத்தில் என் மனைவி அவளுடைய சொந்த பந்தங்களுடன் வந்தாள். சில காரணங்களினால் தாமதமானதை பயத்துடன் கூறினாள் . அதுவும் சரிதான் என்று சமாதானம் ஆகினேன். 

                      காரியங்கள் முடிந்து சில நாட்களில் அண்ணன் லட்சுமணன் வீட்டில் அம்மா இருந்துகொண்டார்கள். நான் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் வந்தேன். கூடவே என் மாமியாரும் வந்தார்கள்.  அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் சிவன் ஏட்டையா வீட்டில் வாடகைக்கு இருந்தோம். 

காவல் நிலையத்தில் .......

             சில மாதங்களில் ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் மாற்றப்பட்டு திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.அப்பொழுது அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளராக  இருந்த திரு கே.குருவையா அவர்களுக்கும் ஆய்வாளர் திரு விஜயராமசந்திரன் அவர்களுக்குமிடையே நல்ல அபிப்ராயம் உண்டு. இந்த  ஆய்வாளரிடம்  தான் நான் நல்ல பல விசயங்களை தெரிந்து கொண்டேன். அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், யார் யாரிடம்  எப்படி பேசவேண்டும் என்பதுபோன்ற நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். சில தினங்களில் அவர்கள் குடும்பமும் வந்துவிட்டது. கீழரதவீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் மனைவியின் சொந்தஊர் திருநெல்வேலி. அங்கு திரு சிவசுப்ரமணி நாடார்.Ex.M.L.C.அவர்கள் மகள். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லோரும் மிகவும் நல்லவர்கள். இவர் ஆய்வாளராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.  காரணம்  இவருடைய அறிவுரையின்படி சர்க்கிளிலுள்ள எல்லா உதவி ஆய்வாளர்களும் மிகவும் திறமையாக பணியாற்றி குற்றங்கள் அதிகம் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கைதியின் மரணம் !

                           ஒரு தடவை விக்கிரமசிங்கபுரத்தில் கைதி ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாக விக்கிரமசிங்கபுரம் உதவி ஆயிவாளர் திரு குருசுமுத்து அவர்கள் காலையிலேயே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களை பார்த்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டார். அப்பொழுது அவருக்கு சொன்ன அந்த அறிவுரைகள் பின்னாளில் நான் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ஆய்வாளராக இருந்தபோது எனக்கு மிகவும் உதவியாகவும் பொதுமக்களிடம் நற்பெயரையும் பெற்றுத்தந்தது.மனிதன் செல்வம், செல்வம் என்று ஆசைபடுவது இயற்கைதான். ஏனென்றால் ஒருவனை செல்வத்தை வைத்துத்தான் எடைபோடுகிறார்கள்.மனிதன் செல்வத்தை சேர்த்து எவ்வளவு உச்சிக்குபோனாலும் அவன் அங்கேயே தங்கிவிடமுடியாது.

                         ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக அன்பாகவே நடந்துகொள்வார். தனக்கு கீழ் பணிபுரியும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்குவதில் சற்று கடுமையாகவும் இருப்பார்.  காவல்நிலையங்களுக்கு ஆய்வு செய்ய போகும்போது என்னையும் கூடவே அழைத்து செல்வார்.அவரது ஆய்வு அறிக்கையை நான் குறிப்பெடுத்து கொள்வேன்.

மேற்படிப்பு!

                          எட்டாவது வகுப்பே படித்திருந்த நான் மேற்கொண்டு படித்து எப்படியாவது ஒரு பட்டம் வாங்கவேண்டும் என்ற ஆவல் என் அடிமனதில் துளிர்விட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் காவலர் வேலைக்கு எட்டாவது வகுப்பு மட்டும் படித்திருந்தாலே போதும். அனால் அவரது திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் பயிற்சி கல்லூரியில் (Tutorial college) சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மேலும்  ஆய்வாளரின் அறிவுரையின்படி தட்டச்சு பயிற்சியிலும் (டிபே writting) சேர்ந்தேன். ஆனால்  நேரம்தான் ஒத்துவரவில்லை. அதனால் அந்த பயிற்சி கல்லூரியில் நான் எனக்கு வசதியான நேரத்தில் எப்பொழுது வந்தாலும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அந்த பயிற்சி கல்லூரி நடத்தும் நிறுவனரிடம் அனுமதி பெற்றேன். அதன்படி மிகவும் சிரத்தையோடும், அக்கறையோடும் பயின்று வந்தேன். 

மகன் முத்துக்குமரன் விழுந்தான்!   
      
                   ஒருநாள் எனது ஒன்றரை  வயது மகன் முத்துக்குமரனை சைக்கிள் பின்சீட்டில் உட்காரவைத்து நான் சைக்கிளை தள்ளினேன். எனது மகன் பின்சீட்டிலிருந்து மல்லாக்க கீழே விழுந்தான். கீழே கல்பாறை அதன்மேல் விழுந்தவுடன் நான் கதறிவிட்டேன். ஐயோ என்று அலறி சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு குழந்தையை தூக்கினேன். "தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை கீழே விழுந்து விட்டானா?" என்று  என் மனைவியும் வீட்டிக்குள்ளிருந்து ஓடிவந்தாள். என் மகனை தூக்கி தலையில் தடவி பார்த்தேன். மனது முழுதும் வேதனை. துக்கம் தொண்டையை அடைத்தது. 
                                                                                                               அப்போது......      

Friday 11 November 2011

மகன் முத்துகுமரன் பிழைத்தான்!

அப்போது .......... 

                      சிறிது நேரம் கழித்து பேயன்விளை போய் டாக்டர் அய்யாதுரை என்பவரை கூட்டிவந்தேன். அவர் குழந்தையின் காதைப்பிடித்து தூக்கினார். அப்பொழுதும் குழந்தை அழவில்லை. ஆ....என்று வாயை திறந்தான். ஆனால் அப்பொழுதும் குழந்தை அழவில்லை. உடனே ஒரு ஊசி போட்டார். டாக்டரிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மருத்துவச்சி அம்மாவோ "பயப்படவேண்டாம். டாக்டர் என்ன டாக்டர் நான் சொல்கிறேன். இன்று இரவே குழந்தை அழுவான் பால் குடிப்பான். நான் இதுபோல நூறு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பயப்படவேண்டாம்" என்று சொன்னார்கள்.

அழுது சிரிக்கவைத்தான்! 

                          அது போலவே குழந்தை இரவு நன்றாக அழுதான். பாலும் குடிக்க ஆரம்பித்தான்.அப்போது தான் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை பார்க்க முடிந்தது. எங்கள் எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். மறுநாளே தூத்துக்குடி சென்று சித்தப்பா, சித்தி, மீளவிட்டானில் அம்மா,  சின்னக்கா, அண்ணன்கள் மற்றும் எல்லோரிடமும் குழந்தை பிறந்த விஷயத்தை  சொல்லிவிட்டு நல்லூருக்கு போய் பெரியக்கா, மச்சான் திரு முனியசாமி அவர்களிடமும் சொல்லிவிட்டு ஆறுமுகநேரி வந்தேன். விருதுநகருக்கு தங்கை பாப்பாவுக்கும் குழந்தை பிறந்த செய்தியை லெட்டர் எழுதினேன். அனைவரும் மறுநாளே வந்து குழந்தையை பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து சென்றார்கள். ஒரு வாரம் குழந்தையுடன் நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. லீவு முடிந்து அம்பாசமுத்திரம் வந்தேன்.

சர்க்கிள் ஆபிஸ் எழுத்தர்!

                           வந்தஉடன் என்னை சர்க்கிள் ஆபீசில் எழுத்தராக இருக்கும்படி ஆய்வாளர்  சொன்னார். அதன்படி எழுத்தராக பணிபுரிந்தேன். ஏற்கனவே சர்க்கிள்  எழுத்தராக இன்னொரு ராமசாமி நியமிக்கப்படிருந்தார். அவருக்கு உதவியாக தலைமை காவலர் திரு தில்லை சிதம்பரம் அவர்களுடன் நானும் சேர்ந்து வேலை பார்தேன். இந்த சர்க்கிளுக்கு அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம், பாப்பாகுடி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி ஆகிய காவல் நிலையங்களும்  மாஞ்சோலை   மணிமுத்தாறு ஆகிய புறக்காவல் நிலையங்களும் சேர்ந்தது. 

                               அம்பாசமுத்திர காவல் நிலையத்திற்கு திரு குளத்து அய்யர் மாற்றப்பட்டு திரு குமாரவேல் அவர்கள் உதவி ஆய்வாளராக இருந்தார். விக்கிரமசிங்கபுரத்திற்கு திரு குருசுமுத்து அவர்களும் பாப்பாகுடிக்கு திரு பால்தேவதாஸ் அவர்களும் வீரவனல்லூருக்கு திரு முகமது காசிம் அவர்களும் சேரன்மகாதேவிக்கு திரு சுந்தரம்பிள்ளை அவர்களும் உதவி ஆய்வாளராக இருந்தார்கள். மாஞ்சோலை புறக்காவல் நிலையத்திற்கு திரு முருகையா அவர்களும் மணிமுத்தாறு புறக்காவல் நிலையத்திற்கு திரு ராஜாராம் நாயுடு அவர்களும் தலைமை காவலர்களாக இருந்தார்கள். 

                                 இவர்கள் அனைவரும் அவர்கள் காவல் நிலைய எழுத்தர்களும் ஒவ்வொரு  வாரமும் நடக்கும் வாராந்திர கூட்டத்திற்கு சர்க்கிள் ஆபீஸ் வரவேண்டும். அப்பொழுது குற்ற வழக்குகளை பற்றியும் கண்டுபிடிப்பதில் உள்ள முன்னேற்றம் பற்றியும் ஆராயப்படும். 

அக்கா இறந்தார்!

                              எனது மகன் முத்துகுமரன் பிறந்த மூன்றாவது மாதம் நல்லூரில் எனது பெரிய அக்கா திடீரென இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பன்னீர்செல்வம் - பதினைந்து வயது . சித்திரைக்கனி - ஏழு வயது . கந்தசாமி - ஐந்து வயது. உடனேயே லீவு சொல்லிவிட்டு நல்லூருக்கு சென்றேன். நான் நல்லூருக்கு வந்த பிறகும் கூட பக்கத்து ஊரில் இருந்த என் மனைவியும் குழந்தையும் அங்கு வந்து சேரவில்லை. எனக்கு கோபமாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையோ என்று கவலையாகவும் இருந்தது.

                                                                                                           அப்போது.........

Tuesday 8 November 2011

மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

அப்போது....  

                            பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னவுடன்     இந்திரா காந்தி என்று பெயர் வைத்தோம். மறுநாள் அம்பாசமுத்திரம் வந்ததும் எனக்கு சற்று உடம்புக்கு  சரியில்லை மனைவியிடம் சொன்னால் அன்று முழுவதும் சாப்பிட மாட்டாள் , ஆகையால் நானே சித்ரா ஸ்டூடியோ  விற்கு எதிரில் இருக்கும் டாக்டர் ரகுபதியிடம் சென்றேன். அவர் மிகவும் கைராசிக்காரர். ஒருவேளை மருந்து கொடுத்தாலே வியாதி குணமாகிவிடும். ( பின்னாளில் அவருடைய பேத்தியே எனது மூன்றாவது மருமகளாக வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை). 

                         இரண்டாவதாக மனைவி கருவுற்றாள். ஆறாவது மாதம் அவள் அம்மா வந்து, முதல் குழந்தை அப்படியாகிவிட்டது (குறைப்பிரசவம்) ஆகையால் இப்பொழுது நான் ஊருக்கு மகளை கூட்டிசெல்கிறேன் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி நானே கூட்டிச்சென்று ஆறுமுகநேரியில் கொண்டு விட்டுவந்தேன்.

பதவி இறக்கம் 

                               ஆய்வாளர் திரு வேலப்பன் அவர்கள் மாற்றப்பட்டு திரு காசி அருணாசலம் அம்பாசமுத்திரம் வந்தார்.ரொம்பவும் கறாராக இருப்பார். ஆனால் நல்லவர். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு பதவி இறக்கம் வந்தது. பதினைந்து மாதங்கள் தலைமைகாவலராக பணிபுரிந்துள்ளேன். திடிரென்று வந்த இந்த பதவி இறக்கம் என்னை ரொம்பவே பாதித்தது (for want of vacancy). அதாவது உதவி ஆய்வாளராக ஆனவர் தலைமை காவலராகவும், தலைமை காவலராக ஆனவர் எழுத்தராகவும் பதவி இறக்கம் வருவது காவல் துறையில் அப்போதைக்கப்போது நடைபெறுவது சகஜமானதுதான். 

                   அப்போது ஒருதடவை ஒரு வழக்கில் எதிரியை தேடி திசையன்விளை என்ற ஊருக்கு போனேன்.அப்போது ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்த ஊரிலிருக்கும் அவர்கள் அம்மா அப்பாவை பார்த்து விட்டு வரும்படி சொன்னார்கள். அதன்படி திசையன்விளை வந்து தேடிவந்த எதிரியைப்பற்றி விசாரித்தும் நல்ல தகவல் கொடுப்பவர்களை நியமித்தேன். ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்தஊர் திசையன்விளை அருகிலுள்ள ராமன்குடி இருப்பு. திசையன்விளையிலிருந்து சுமார் மூன்று கிலோமிட்டேர் தூரம் உள்ளது. ஆனால் திசையன் விளையிலேயே  இரவாகிவிட்து .    

என்ன வர்ணம்?

                                ஒரு கடைசி பஸ்ஸில் ராமன்குடி இருப்புக்கு வந்தேன். அங்கே அவர்கள் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தேன். ஆய்வாளர் கொடுத்தனுப்பிய பொருட்களை கொடுத்துவிட்டு "நான் புறப்புடுகிறேன்" என்று சொன்னேன். அனால் இப்பொழுது "பஸ் கிடையாதே இனி காலையில்தான் திருசெந்தூர் பஸ் உண்டு.ஆகையால் இங்கு தங்கிவிட்டு காலையில் போங்கள்"என்று சொன்னார்கள். சாப்பிட சொன்னர்கள்.சாப்பிட்டேன். வெளித்திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் விட்டிற்குள்ளே கட்டிலில் படுக்கசொல்லி ஒரு போர்வையை தந்தார்கள்.அவர்களுக்கோ எழுபது வயதிருக்கும்.அவர்களால் கீழே தரையில் படுக்க முடியாது என்பதால் "நான் வெளித்திண்ணையில் படுத்துகொள்கிறேன்" என்று திண்ணைக்கு வந்தேன். அவர்கள் விடவில்லை. "உள்ளே கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள்" என்று பிடிவாதமாக சொன்னதால் சரிஎன்று  உள்ளே போய் போர்வையை கட்டிலில் விரித்தேன். அப்பொழுது அந்த அம்மா "நீங்கள் என்ன வர்ணம்" என்று கேட்டார்கள். நான் போர்வையைத்தான் என்ன கலர் என்று கேட்கிறார்கள் என்று நினைத்து "பச்சை" என்று சொன்னேன். 

                                 அவர்கள் இருவரும் சிரித்தார்கள். "சரி படுத்துக்கொள்ளுங்கள்" என்றார்கள். அவர்கள் ரொம்பவும் மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தியது எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள். காலையில் எழுந்து முதல் பஸ்ஸுக்கே திருசெந்தூர் சென்று அங்கிருந்து ஆறுமுகநேரி சென்றேன்.  ஆனால் சில வருடங்கள்  கழித்துதான் அவர்கள் கேட்ட வர்ணத்தின் அர்த்தம் புரிந்தது. 

இரண்டாவது பிரசவம்!

                        ஆறுமுகநேரியில் மனைவியை பார்த்துவிட்டு அன்று அங்கே தங்கினேன். அப்பொழுது என் மனைவி "மருத்துவச்சியம்மா நேற்று வந்தார்கள் இன்னும் ஒரு வாரத்தில் பேறுகாலம்  இருக்கும் என்று சொன்னார்கள் நீங்கள் லீவு எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்றாள். சரியன்று மறுநாள் காலையில் புறப்பட்டு அம்பாசமுத்திரம் வந்தேன். ஆய்வாளரை சந்தித்து அவர்கள் அம்மா அப்பா நலமுடன் இருப்பதாக சொன்னேன். "மேலும் மனைவிக்கு பேறுகாலமாக  இருப்பதால் ஒரு வாரம் லீவு வேண்டும்" என்று கேட்டேன். "சரி சென்றுவாருங்கள்" என்று சொல்லிவிட்டார். காவல்நிலையத்திற்கு  வந்து லீவு லெட்டர் கொடுத்துவிட்டு ஆறுமுகனேரிக்கு வந்தேன்.

                      ஆறுமுகநேரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு சென்றேன்.அங்கே சித்தப்பா, சித்தி எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான் போய் அம்மாவிடமும், அண்ணனிடமும் சொல்லிவிட்டு அன்று மீளவிட்டானில் தங்கினேன். தம்பி ராமலிங்கம் ரயில்வேயில் கலாசியாக  வேலைபார்த்தான். மிளவிட்டானிலிருந்து மற்ற பையன்களும் கூட வேலை செய்வதால் அவர்களுடன் ரயில்வே ஸ்டேசனிலேயே தங்கிகொள்வான். மறுநாள் புறப்பட்டு ஆறுமுகநேரி வந்தேன்.
   
மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

                                   8.11.1967 காலையில் வீட்டிலேயே மனைவிக்கு ஆண் குழந்தை (முத்துகுமரன்) பிறந்தது. சுகப்பிரசவம். மருத்துவச்சி அம்மா, "குழந்தை பிறந்தது முதல் அழவில்லை" ன்று சொன்னார்கள். உடனே நான் "டாக்டரை கூட்டிவருகிறேன்" என்று சொன்னேன். "வேண்டாம் சரியாகிவிடும் சற்று நேரம் கழித்து குழந்தை அழும்" என்று சொன்னார்கள். ஏற்கனவே முதல் குழந்தையும் இறந்துவிட்டதால்  எனக்கு மனம் கேட்கவில்லை.
                                                                                                    அப்போது........     

Saturday 5 November 2011

அம்பாசமுத்திரத்தில் வாழ்க்கை!

அப்போது....
                   
                          என் மனைவி ஆறு மாதம்  கர்ப்பமாகயிருந்தாள். எனக்கு  மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியை நல்லமுறையில் கவனித்து கொண்டேன். என் அம்மாவும் நன்றாக கவனித்து கொண்டார்கள். 

இறந்த குழந்தை!

                          அந்த தெருவில் கோர்ட்டில் அமீனாவாக வேலைபார்த்த திரு சாமிநாதன் அவர்கள் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவர் மனைவி சொந்த ஊர் நாங்குநேரி. அவர் எங்களிடம் மிகவும் அன்பாகவும் இருப்பார்கள். அவர் மனைவி திருமதி அம்மாகுட்டி, குழந்தைகள் வரதன் மற்றுமொரு குட்டிபையன் இருந்தான். அவர் ஒரு தூரத்து சொந்தமானதால் என் மனைவியை தன் சொந்த மகளாகவும் என்னை மருமகனாகவுமே எண்ணி பழகினார். ஆகையால் எங்களுக்கு ரொம்ப  உதவியாக இருந்தது.

                               சிறிது நாளில் என்மனைவிக்கு ஏழாவது மாதத்தில் குறைபிரசவமானது. குழந்தை இறந்தே பிறந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் மனைவி மிகவும் பாதிக்கப்பட்டாள். மனதளவிலும் உடலளவிலும். ஊரிலிருந்து மனைவியின் அம்மா, அப்பா எல்லோரும் வந்தார்கள். எனது மாமியார் பத்து நாட்கள் கூடவேஇருந்தார்கள். அவர்கள் ஊருக்கு போகும்போது வேறு வீடு  பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றார்கள். உடனே ஒரு வாரத்தில் பெரியகுளம் தெருவில் திரு சிவனு ஏட்டய்யா அவர்கள் வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு தந்தார்கள். அந்த வீடு நல்ல வசதியாக இருந்தது. 

கடமை உணர்வு!

                                  1967 ஜூன் மாதம் குற்றாலம் சீசன் பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்பினார்கள். அந்த சமயம் அம்மாவும் ஊருக்கு போய்விட்டதால் மனைவியையும் என்னுடன் குற்றாலத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு காவலர்கள் தங்குவதற்கு ஒரு மடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனைவியுடன் அந்த மடத்திலேயே தங்கி இருந்தோம். மற்றும் சில காவலர்களும் குடும்பத்தினர்களுடன் வந்திருந்தார்கள்.அவர்களும் அந்த மடத்திலேயே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாட்கள் அங்கு டுட்டி என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கலாம் என்று மனைவி சொன்னதால் ஒரு லாட்ஜுக்கு சென்று  தங்கினோம். 

மறதி!

                ஒருநாள் சிற்றருவியில் குளித்துவிட்டு காவல்நிலையம் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். அன்று எனக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவலர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டிய டுட்டி. ஆகையால் மனைவியை சற்று ரோட்டோரமாக "நில்லு நான் காவல்நிலையம் சென்று யார்யாருக்கு என்ன பணி நியமிக்கவேண்டும் என்று எனது உதவியாளர் காவலருக்கு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு காவல்நிலையம் சென்றேன்.

                              அங்கு காவலர்கள் கூட்டமாக நின்று பணி நியமனத்திற்கு முண்டியடித்து  கொண்டிருந்தார்கள். அப்பால் அவர்களை சமாதானப்படுத்தி வரிசையாக டுட்டி நியமியுங்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். ரோட்டோரமாக தண்ணீர் சொட்ட சொட்ட நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த என் மனைவியை ஒரு காவலர் பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார். அப்பொழுதுதான் அவளை அங்கே நிறுத்திவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனே எனது அசிஸ்டன்ட் காவலரை டுட்டி நியமிக்க சொல்லிவிட்டு ஓடி வந்தேன். மனைவியிடம் "சாரி" சொல்லிவிட்டு லாட்ஜிக்கு வந்தோம். பதினைந்து நாட்கள் டுட்டி முடிந்து அம்பாசமுத்திரம் வந்தோம்.

சுற்றுலா செல்லும் குழந்தைகள்!

                            ஒருநாள் பிரம்மதேசம் என்ற ஊரில்  தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் மணிமுத்தாறு  அணையை பார்க்க பள்ளி குழந்தைகளை அழைத்து செல்கிறோம். நீங்களும்  வாருங்கள் போய் வரலாம் என்று சொன்னார். மனைவியும் விரும்பியதால் சரி என்று சொன்னேன். அவர்களை டூர் அனுப்பிவிட்டு "நீங்கள் மணிமுத்தார் போங்கள் நான் மத்தியானம் காவல்நிலையத்தில் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். ஆனால் காவல்நிலையம் சென்றவுடன் அங்கிருந்த சூழ்நிலையில் மணிமுத்தார் போகவேண்டு மென்பதையே மறந்துவிட்டேன். அங்கு கஜானா பாதுகாப்பு பணியிலிருந்த தலைமைக்காவலர் திரு ஆதினம் அவர்களை மாற்றி நான் பாதுகாப்பு பணியிலிருக்க  வேண்டியதாகிவிட்டது. மத்தியானம் சாப்பாட்டைஓட்டலில் வாங்கிவரச்சொல்லி சாப்பிட்டேன்.

                              மாலையில் பணி மாற்றப்பட்டு வீட்டிற்கு போனபோதுதான் மனைவி டூர் போய் வந்தாள். அப்பொழுதுதான் அவள் டூர் போனதே நினைவுக்கு வந்தது. கோபமாக ஒரு முறை முறைத்து பார்த்தாள். சமாதானம் சொல்லி சமாளித்தேன். இதெல்லாம் எனது ஞாபகசக்தி மறதியினால் அல்ல. வேலையில் அக்கறையும்,கடமை உணர்வும்தான். நான் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டால் வீட்டு ஞாபகம் என்பதே எனக்கு இருந்ததில்லை.

                              மேலும் என் மனைவி சொன்னாள் "பள்ளிக்குழந்தைகளை டீச்சர்கள் கவனிப்பதேயில்லை. அதுகள் இஸ்டத்திற்கு ஆபத்தான இடங்களுக்கும் போய்விடுகிறது. அதை யாரும் கவனிப்பதுமில்லை கண்டிப்பதுமில்லை" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள். அந்த பயம் இப்பொழுதும்  இருப்பதால் நாங்கள் எங்கள் குழந்தைகளை அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் வரை டூர் அனுப்பியதே கிடையாது.

தங்கைக்கு முதல் குழந்தை!


                               அம்பாசமுத்திரத்தில் இருந்த போது ஒருநாள் தங்கை பாப்பாவுக்கு பெண்  குழந்தை பிறந்ததாக தகவல் வந்தது. நானும் எனது மனைவியும் பார்த்து விட்டு வருவதற்காக சென்றோம். அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்று கூறினார்கள்.
                                                                               அப்போது.......

Saturday 29 October 2011

மீண்டும் பதவி உயர்வு!

அப்போது.... 

                   அந்த மெமோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. "எழுத்தர் இந்த வழக்கில் செக்சனை குறைத்து  பதிவு செய்துள்ளார். எனவே வழக்கை உதவி ஆய்வாளர் மறு விசாரணை செய்து  விசாரணை அறிக்கையுடன் எழுத்தருடைய சமாதானமும் இணைத்து அனுப்பவும்" என்று அந்த மெமோவில் குறிப்பு எழுதி இருந்தது. ஏற்கெனவே ஏட்டையா எனது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் அந்த ஊருக்கு போய் விசாரித்துவிட்டார். அதனால் சரியான செக்சன்தான் போடப்பட்டுள்ளது என்றும் எதிரி வாதியின் வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு செக்சன், கம்பால் எதிரியை அடித்ததற்கு ஒரு செக்சன், பணத்தை திருடியதற்கு ஒரு செக்சன் போடப்பட்டுள்ளது. அதனால் எழுத்தர் மீது தவறேதுமில்லை" என்று பதில் அறிக்கை எழுதினார். 

                     ஒரு வாரம் கழித்து இன்ஸ்பெக்டர் காவல்நிலையம் வந்தார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் சமாதானம் அடையாமல் தலைமை காவலர் திரு.ராஜா அவர்களை தன்னுடன் அழைத்து கொண்டு அங்கே அந்த ஊருக்கு சென்று அவர்கள் இருவரும் நேரடியாக விசாரணை நடத்தினர். ஊர் தலையாரியும் சம்மந்தப்பட்ட பெண்ணும் நடந்தவைகளை இவர்களிடம் கூறினார். இன்ஸ்பெக்டருக்கு மிகவும் ஆச்சர்யம். "இந்த எழுத்தர் ராமசாமி எல்லா செக்சனையும் மிகவும் சரியாக குறிப்பிட்டு வழக்கு பதிந்திருக்கிறாரே" என்று தலைமை காவலரிடம் தெரிவித்துவிட்டு காவல்நிலையம் வந்து என்னையும் பாராட்டிவிட்டு சென்றார்.

குலதெய்வம் கோயில்!

                            மற்றொரு சமயம் காவல்நிலையத்தில் குற்ற பதிவேட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுஒரு வருடத்திற்கு முன் விஜயாச்சம்பாடு என்ற ஊரில் இலங்காமணி சாஸ்த்தா கோயிலில் சாமியின் தங்க நகை திருடுபோயுள்ளது. அது கண்டுபிடிக்காமல் இருந்தது. எனது குலதெய்வம் கோயில் இருக்கும் ஊர் பற்றி அம்மா என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இலங்காமணி சாஸ்தா கோயில் என்ற ஞாபகம் வந்தது. எனது தங்கைக்கும் அதன் நினைவாகத்தான் இலங்காமணி பாப்பா என்று பெருட்டிருக்கிரார்கள்.  தான் நான் தேடிக்கொண்டிருந்த எங்கள் குலதெய்வம் கோயில் இதுதான் என்பதை தெரிந்துகொண்டு அம்மாவிற்கும் அண்ணன் தம்பி எல்லோருக்கும் தெரிவித்தேன். எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.


                   விஜயனாரயனதிலிருக்கும்போது தூத்துக்குடியில் மாமன் மகள் பஞ்சவர்ணத்திற்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வந்தது. உடனே நானும் மனைவியும் அண்ணன் மகன் சேகரையும் கூட்டிக்கொண்டு அம்மாவுடன் தூத்துக்குடிக்கு போனோம். அங்கே பஞ்சவர்ணமும் அவள் கணவர் திரு  நயினார் அண்ணனும்   என்னிடம்  குழந்தைக்கு  பெயர்  வைக்குமாறு கூறினார். குழந்தையை பார்த்துவிட்டு ராமன்துறை பெண்ணின் நினைவாக அந்த குழந்தைக்கு "ரோஸ்மேரி" என்று பெயர் வைத்தேன். இரண்டு நாள் இருந்துவிட்டு விஜயநாராயணம் வந்தோம்.


மீண்டும் பதவி உயர்வு!
                 
                   ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தைந்து டிசம்பரில் தலைமை காவலர் தேர்வு நடந்தது. அதில் நான் கலந்துகொள்ள எல்லா தகுதியும் பெற்றிருந்தேன். இந்த தேர்வுகளில் சரியான பரிச்சயம் இல்லாததால் இதில் தேர்ச்சி பெறுவேனா என்று பயந்தேன். "குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிக்ஷை எழுதுங்கள். நிச்சயமாக நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள்" என்றுஅம்மாவும்,மனைவியும் சொன்னார்கள். அதுபோலவே நான் என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு தேர்வில் கலந்துகொண்டேன். ஒரு வாரத்தில் பதில் தெரிந்தது. நான் மாவட்டத்திலேயே முதலாவதாக பாசானேன். பத்து நாட்களில் போஸ்டிங் ஆர்டர் வந்துவிட்டது. எனக்கு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு தலைமைகாவலராக  பதவி உயர்வு ஆர்டர் வந்துவிட்டது.

                   சாத்தான்குளம் வந்து அங்குதிரு டி.எ.செல்லப்பா தலைமை காவலரை மாற்றினேன்.உதவி ஆய்வாளர் திரு துரைசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். திரு செல்லப்பா அவர்கள்  என்னை தனது உடன் பிறந்த சகோதரனைப்போல் நினைத்து அந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பதினெட்டு கிராமங்களைபற்றியும் அங்கு யார் யார் எதிரிகளை கண்டுபிடிப்பதில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக சொன்னார். அவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி  சென்றார் . (பின்னாளில் இவருடைய ஒரே மகன்  முனியசாமி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்களுடைய மகள் படிப்பில் மிகவும் திறமையான ஜோதிநிர்மலாவை திருமணம் செய்துகொண்டார். இப்பொழுது திருமதி ஜோதிநிர்மலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.)

                           திருச்செந்தூர் சென்று ஆய்வாளர்  திரு நடராஜன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். சாத்தான்குளத்தில் எனக்கு காவலர் குடிஇருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இரண்டுநாட்கள் லீவு எடுத்துகொண்டு ஊரில் போய் அம்மாவையும் மனைவியையும் அழைத்துவந்தேன். 

                        ஒருநாள் நான் அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தேன். மனைவி கோபமாகவும் என்னிடம் பேசாமலும் இருந்தாள். எனக்கு சாப்பாடும் எடுத்து வைக்கவில்லை. அம்மாதான் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். சாப்பிட்டுவிட்டு மனைவியிடம் "ஏன் கோபமாக இருக்கிறாய்?" என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு ஒரு லெட்டரை என்மேல் விசி எறிந்தாள். லெட்டரை படித்துப்பார்த்தேன். ராமன்துறை ரோஸ்மேரி இடமிருந்து வந்திருக்கிறது. அதில் "மணமகள் என் கடிதத்தை படித்துவிட்டாளா?  நான்  ஒன்றும் தவறாக  எழுதவில்லையே!" என்று எழுதியிருந்தாள். உடனே "என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். அத்தை  எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.இனிமேல் இப்படி ஒரு லெட்டர் வரக்கூடாது" என்று சொல்லி என் கையில் இருந்த லெட்டரை வெடுக்கென்று பிடுங்கி சுக்கு நூறாக கிழித்து போட்டாள். இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில்  அவளை சமாதானப்படுத்தி இனிமேல் லெட்டர் வராது என்று சொல்லிவிட்டேன். கொஞ்சம் சமாதானமானாள். 

                அடிக்கடி திருசெந்தூர் கோர்ட்டுக்கு போகும்போதெல்லாம் மனைவியின் தாய்மாமன் திரு கோபால் அவர்களின் பிறை என்று சொல்லப்பட்ட அவர்களுடைய ஆபிசுக்கு சென்று அவர்களின் நலம் விசாரித்து வருவேன். திருசெந்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஐ.துரைராஜ் அவர்களை சந்தித்து அறிவுரைகள் பெறுவேன். மிகவும் நல்லவர். ஒரு வருடம் நல்லபடியாக பணி செய்துவந்தேன்.

அம்பாசமுத்திரம் மாறுதல் 
               
                   திடீரென்று  அம்பாசமுத்திரம் மாற்றல் ஆர்டர்  வந்தது. அன்று பங்குனி உத்திரம் என்பதால் அம்மா, மனைவி எல்லோரும் குலதெய்வம் இலங்காமணி சாஸ்தா கோவிலுக்கு போய் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தோம். அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.

                  மறுநாள் மாறுதல் உத்தரவை பெற்று ஆறுமுகநேரி போய் மனைவியை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு தூத்துக்குடி போய் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு அம்மாவை அண்ணன் லெட்சுமணன் வீட்டில் விட்டுவிட்டு ஏழு நாட்கள் லீவையும் முடித்து அம்பாசமுத்திரம் சென்றேன். அங்கு திரு. குளத்து ஐயர் உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணிக்கு ஆஜரானேன். அங்கு மேலும் மூன்று தலைமை காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் திருவாளர்கள் ஆதினம், ராஜாராம் நாயுடு, ஜானி பாய் ஆகியோர். உதவி ஆய்வாளர் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு வேலப்பன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். தலைமை காவலர்கள் மூவரும் நல்லவர்கள். அவர்கள் என்னிடம் நன்றாக பழகினார்கள்.

                அம்பாசமுத்திரம் தெப்பகுளம் தெருவில் வாடகைக்கு வீடுபார்த்தேன். இரண்டு நாட்கள் லீவு எடுத்து ஊருக்கு  போய் அம்மாவையும், மனைவியையும்   அழைத்துவந்தேன். மனைவியை அழைத்து வந்தேன்.
                                                                                 அப்போது ......

Tuesday 25 October 2011

பாராட்டும் வழக்கு பதிவுகளும் !

அப்போது

                            "நானும் சித்தப்பாவோடுதான் இருப்பேன்" என்று எங்கள் பெரிய அண்ணன் மகன் ஐந்து வயது நிரம்பிய சேகர் அழுது கொண்டிருந்தான். "அவனும் எங்களோடு இருக்கட்டும்" என்று நான் கூறியவுடன்  எங்களுடன் இருந்தான். விஜயநாராயனத்தில் எழுத்தர் வேலையும் வாழ்க்கையும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.


பாராட்டு!

                 ஒருநாள் நான் காவல் நிலையத்தில் இருக்கும்போது ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காவல் நிலையத்தை திடீர் பார்வையிட வந்தார்கள். அவர் மிகவும் கறாரான அதிகாரி. அவரை பார்த்தாலே மற்ற அதிகாரிகள் பயந்து ஓடுவார்கள். அந்த நேரம் பார்த்து உதவி ஆய்வாளரும் இல்லை அவர் கோர்ட்டுக்கு சென்றிருந்தார். தலைமை காவலரும் லீவில் சென்றிருந்தார். எந்த அதிகாரியும் காவல் நிலையம் பார்வையிட வந்தால்  முதலில் பணப்பதிவேடைத்தான் கேட்பார்கள். அவர் வந்தவுடன் பணப்பதிவேடையும் கையிருப்பு பணத்தையும் கொண்டு அவர் முன்பு வைத்தேன். பணப்பதிவேடு நான்கு  நாட்களாக எழுதவில்லை. அதிகாரி என்னை மிகவும் கடிந்துகொண்டார். ஏன் எழுதவில்லை என்று கேட்டார்.  நான் எழுத்தர் பணப்பதிவேடு எழுதகூடாது "என்பதற்காக நான் எழுதவில்லை" என்று சொன்னேன். அதற்கு அவர் "அப்போ உனக்கு பணப்பதிவேடு எழுத தெரியாது, அதனாலதான் நீ எழுதவில்லை " என்று சொன்னார். "அய்யா எனக்கு பணப்பதிவேடு நன்றாக எழுத தெரியும்" என்று அதுவரை எழுத வேண்டியதை நான் தனி தாளில்  எழுதி வைத்திருந்ததை கொண்டுவந்து காட்டினேன் . உடனே அதை படித்து பார்த்துவிட்டு "சபாஷ்! இதேபோலே எழுதிகொண்டுவா" என்றார். அதைபோலே எழுதிக்கொண்டு கொடுத்தேன். பணப்பதிவேட்டின்படி கையிருப்பு பணமும் சரியாக இருந்தது. அதிகாரி மிகவும் சந்தோசப்பட்டு அதிகாரிகள் பார்வை பதிவேட்டில் நல்லவிதமாக எழுதிவிட்டு சென்றார்.

வறுமை வழக்கு  

                      ஒரு நாள் நான் காவல்நிலையத்தில் இருக்கும்போது முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண் தலையில் முக்காடு போட்டுகொண்டு அழுதுகொண்டு வந்தாள். அவள் தலைக்குமேல் ஏதோ நீட்டி கொண்டிருந்தது. முக்காட்டை நீக்கியபின்பு பார்த்தால் தலையில் ஒரு கத்தி நீட்டி கொண்டிருந்தது. அவளை உட்காரவைத்து காப்பி வாங்கி கொடுத்து விசாரித்தேன்.

                      அது ஒரு நெல் கதிர் அறுக்கும் பன்னரிவாள் என்று தெரிந்தது. அந்த பெண்ணை விசாரித்தேன். அந்த காலம் வறுமையின் கொடுமை. அதன் விளைவு தன் பதினைந்து வயது மகன் சப்பிடும்போது இன்னும் கொஞ்சம் சோறு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். வேறு வழி இல்லாமல் சோறு இல்லாமல் சோறுவடித்த கஞ்சி தண்ணியை கொடுத்திருக்கிறாள். பசி மகன் கண்ணை மறைக்க கத்தியை எடுத்து தாயின் தலையில் வெட்டியிருக்கிறான் .

                       அவனை ஒரு காவலர் மூலமாக அழைத்துவரசெய்து விசாரித்தேன். அன்று உதவி ஆய்வாளரும் தலைமை காவலரும் வேறு அலுவலாக வெளியே போயிருந்தார்கள். அதனால் அந்த பெண்ணை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அந்த கத்தியை எடுக்கும்படி சொன்னேன் . அந்த டாக்டருக்கு எனது பணம் ரூபாய் பத்து கொடுத்து அந்த சிறுவனிடம் "என்னப்பா! நம்மை பத்து மாதம் கருவறையில பாதுகாத்து சுமந்து பெற்ற தாயை அவள் கல்லறைக்கு போகும்வரை காப்பாற்ற வேண்டிய மகனே இப்படி செய்யலாமா?" எச்சரித்து வழக்கு ஏதும் பதியாமல் அனுப்பினேன். மேலும் அந்த பெண்ணுக்கு ஒரு காவலர் சாப்பாடு வாங்கி கொடுத்தார்.


ஒரு பெண்ணின் பண வழக்கு 

                        விஜயனாராயனத்தில்  பெரும்தனக்கரர் திரு ராஜகோபால் பாண்டியன் அவர்கள் அவர் தம்பி திரு இலங்காமணி தேவர் மற்றும் தெற்கு விஜயனரயனத்தில் திரு வாலிபால் மாடசாமி, அவர் தம்பி திரு சங்கரபாண்டியன், மற்றொரு தம்பி திரு ராமசந்திரன் இவர் கிராம அதிகாரியாக இருந்தார். இவர்கள்தான் இந்த ஊரில் முக்கியமான நபர்கள்.  ஒரு நாள் தலையாரி ஒருவர் ஒரு வழக்கு கொண்டுவந்தார்.

                    சாதரணமாக இங்கெல்லாம் கிராம அதிகாரிகள் மூலமாகதான் வழக்குகள் வரும். அன்று அதுபோல அந்த தலையாரி கொண்டுவந்த ரிப்போர்ட்டில் காரியாண்டி என்ற ஊரில் பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் ஒரு பெண் தனது "வீட்டில் சம்பளப்பணம் வாங்கி  தலையணை கீழ வைத்து படுத்திருந்தேன் இரவு ஒரு மணிக்கு யாரோ ஒருவர் கதவை தட்டினார். நான் கதவை திறந்தேன் எனது தலையில் கம்பால் ஒரு அடி விழுந்தது நான் மயங்கி கீழ விழுந்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தேன் எனது பணம் வைத்திருந்த பணப்பை வீட்டு முன்பு கிடந்தது. அதிலிருந்த இருநூறு  ரூபாயை காணவில்லை" என்று எழுதியிருந்தது.

                     நான் அந்த ரிப்போர்டை வாங்கி வழக்கு பதிவு செய்தேன். அன்று புதிய தலைமை காவலராக திரு ராஜா என்பவர் வந்திருந்தார். அன்று அவர் நீதிமன்ற அலுவலாக நான்குநேரிக்கு சென்று விட்டார். உதவி ஆய்வாளரும் வேறு ஒரு வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தார். இந்த வழக்கில் திருடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு பிரிவும், அந்த பெண்ணை கம்பால் அடித்தற்கு ஒரு பிரிவும் மற்றும் பணத்தை திருடியதற்கு ஒரு பிரிவும சேர்த்து வழக்கு பதிவு செய்து ஒரு காவலர் மூலமாக முதல் தகவல் அறிக்கையை தலைமை காவலர் திரு ராஜா அவர்கள் விசாரணைக்காக அனுப்பினேன். வழக்கமாக சர்க்கிள் ஆபிசுக்கு போகவேண்டிய முதல் தகவல் அறிக்கை இரண்டுநாள் கழித்துதான் செல்லும். அந்த முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்கள் நான் தயாரித்த முதல் தகவல் அறிக்கை சரியில்லை என்று எனக்கு  ஒரு மெமோ அனுப்பினார்.
                                                                                      அப்போது........

Wednesday 19 October 2011

என் திருமணம்!

அப்போது 

                               அவர் கூப்பிட்ட குரல் கேட்டு  நின்றோம். பக்கத்தில் வந்த அவர் "நான் முத்தம்மாளின் புருஷன் சண்முகம் என்று சொன்னார். "அய்யா அந்த பெண்ணின் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டோம். கட்டாயம் நாளை மறுநாள் வந்துவிடுங்கள்" என்று சொன்னார். நாங்களும் "சரி நாளை மறுநாள் மாலையில் வருகிறோம்" என்று சொல்லிவிட்டு நல்லுருக்கு நடந்தோம். நல்லூர் வந்து மச்சான், அக்காள், மருமக்கள் பன்னீர்செல்வம், கந்தசாமி, சித்திரைக்கனி எல்லோரையும் பார்த்துவிட்டு, பெண் விசயத்தையும் சொல்லி நீங்களும் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு ஆத்தூருக்கு நடந்தே வந்து பஸ் ஏறி தூத்துக்குடி வந்தோம் . 

                                 மீளவிட்டான் போய் அம்மாவிடம் பெண் விஷயத்தை சொன்னேன். நாளைமறுநாள் நீங்களும் அண்ணன், அண்ணி, சித்தப்பா, சித்தி எல்லோரும் பார்த்துவிட்டு வாருங்கள். நல்லூரிலிருந்து அக்காவும் மச்சானும் ஆறுமுகநேரிக்கு  வந்துவிடுவார்கள். நான் வரவில்லை" என்று சொன்னேன். "ஏன் நீ பெண்ணை பார்க்கவேண்டாமா? . உனக்கு பெண்ணை பிடித்திருந்தால் தானே மேற்கொண்டு பேசமுடியும்" என்று சொன்னார்கள் . "உங்களுக்கு பிடித்திருந்தால் போதும். பின்பு பேசிமுடிவு செய்யும்போது நான் பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டேன்.  

                 மறுநாள் சித்தப்பாவிடம் போய் நான் பணிக்கு போகவேண்டும். இது பதவி உயர்வு. உடனே பணிக்கு சேரவேண்டும். நீங்கள் பெண்ணை பார்த்து  விட்டு வாருங்கள் " என்று சொன்னேன். உடனே சித்தப்பா "ஏன் ராமந்துரையிலிருந்து ஒரு பெண் என்னை மாமா மாமா என்று லெட்டர் எழுதி இருந்தாளே! அந்த பெண்ணை முடிக்கலாம் என்று சொல்கிறாயா?" என்று சொன்னார் . "அப்படியில்லை. நான் நிச்சயமாக இந்த எழுத்தர் பணியில் நாளைமறுநாள் சேரவேண்டும். இந்த பெண்ணையே முடிவு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு விஜயநாராயணம் புறப்பட்டேன். அவர்கள்      பெண்பார்க்க போன அன்று நான் விஜயநாராயணம் காவல் நிலையம் வந்து பணியில் சேர்ந்தேன்.

                         உதவி ஆய்வாளர் திரு செய்யத் செரிப் அவர்கள், தலைமை காவலர் திரு களக்காடு முகமது , காவலர்கள் முடிவைத்தானேந்தல் சுப்பையா பிள்ளை, தென்காசி சண்முகவேல் ஆசாரி, நாகர்கோயில் ஜான் , மற்றும் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். மறுநாள் வள்ளியூர் வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்களை மரியாதையின் நிமித்தம் பார்த்து அறிவுரைகள் பெற்று காவல் நிலையம் வந்தேன்.

மீண்டும் பெண் பார்க்க சென்றேன் 

                      ஒரு மாதம் கழித்து இரண்டுநாட்கள் லீவு எடுத்து வூருக்கு போனேன்.  "பெண் பார்க்க போகவேண்டும்" என்று அம்மா சொன்னார்கள் . "உங்களுக்கு பெண் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டேன்.  அம்மா ரொம்பபிடித்திருக்கிறது. நல்ல பெண்ணாக தெரிகிறது" என்று சொன்னார்கள். "நீயும் பெண்ணை பார்த்துவிட்டால் பேசி முடிவு செய்து விடலாம்" என்றார்கள். "நீங்கள் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்கு பிடித்திருகிறதா அது போதும்" என்றேன். "உன்னை அவர்களுக்கும், பெண்ணுக்கும் பிடிக்கவேண்டாமா? அதனால் நாளைக்கு எல்லோரும் போய் பார்ப்போம். உன்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் பேசி முடிவு செய்துவிடலாம்" என்றார்கள்.  மறுநாள் அம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன் லக்ஷ்மணன், அண்ணி சமுத்திரக்கனி, அனைவரும் செல்வராஜபுரம்  போனோம். அங்கே  பெண்ணின் அப்பா திரு ஆகாசமுத்து ,  அம்மா திருமதி வெள்ளையம்மாள், பெண்ணின் தாய்மாமன் திரு தோப்பூர் கோபாலகிருஸ்ணன், பெண்ணின் தாத்தா திரு அனந்தையா மற்றும் ஊர் பெரியவர்கள் இருந்தார்கள்.

                   காப்பி பிஸ்கட் எல்லாம் தந்தார்கள். ஆனால் அந்த ஊர் வழக்கப்படி பெண்ணை மாப்பிள்ளையிடம் காட்டமாட்டார்களாம். பெண்ணுக்கு தெரியாமல் மறைவாக நின்றுதான் பர்த்துக்கொள்ளவேண்டுமாம். நானும் பெண்ணை பார்க்கவேண்டுமென்று சொல்லவில்லை. பெண்ணின் தாய்மாமன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் சித்தப்பாவுக்கும் முன்பே நல்ல பழக்கம் இருந்திருகிறது. அதனால் அவர் "வேறு எதுவும் பேசவேண்டாம். இதே மாப்பிள்ளை இதே பெண்தான் ஆவணி மாதம் கல்யாணம்" என்று சொல்லிவிட்டார். (பின்னாளில் சித்தப்பா மகன் தர்மலிங்கத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் என்ற ஊரில் பிரேமா என்ற பெண்ணை பார்க்க போயிருந்தோம், அப்பொழுதுஅந்த பெண்ணே எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள். அதுமட்டுமல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் தனியாக பேசவேண்டுமாம் என்று ஒருவர் சொன்னார்.  உடனே இருவரும் ஒரு தனி அறையில் ஐந்து நிமிஷம் பேசிவிட்டு வந்தார்கள்.  ஊருக்கு திரும்பி வரும்போது எனது மனைவி என் காதோரம் வந்து நீங்களும் இருக்கிறீர்களே என்னை பெண்பார்க்க வந்தபோது பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லவேண்டாமா  எனக்கும் உங்களை அந்த நேரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா என்று சொல்லி வெட்கத்துடன்  சிரித்தாள்.) பின்பு ஆறுமுகநேரி பள்ளிவாசல் வந்து பஸ்சில் ஊருக்கு  வந்தோம். நான் எனது பணிக்கு சென்றுவிட்டேன்.  

                ஒருநாள் அம்மாவிடமிருந்து உடனே புறப்பட்டுவா என்று லெட்டர் வந்தது. என்னமோ ஏதோ என்று இரண்டு நாட்கள் லீவு எடுத்து மீளவிட்டான் வந்தேன். அம்மாவிடம் "என்னம்மா அவசரம்" என்றேன். "வேறொன்றுமில்லை அந்த பெண்ணின் பாட்டிஉன்னை பார்க்கவேண்டுமாம். அவளுக்கு பிடித்திருந்தால் தான் திருமணம் நடக்குமாம். நீ அங்கு போய் அந்த பாட்டியை.பார்த்துவிட்டுவா" என்று சொன்னார்கள்.  "சரியம்மா" என்று சொல்லிவிட்டு ஆறுமுகநேரி அந்த பாட்டி வீடிற்கு போனேன். 

                        பாட்டி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் கொஞ்சம் இருங்கள் இப்போ வந்துவிடுவாள் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சுமார் எண்பது வயதிருக்கும் பாட்டி வந்தாள். உடனே பக்கத்து வீட்டுக்காரி "பாட்டி!  எங்கே போனீர்கள்? மாப்பிள்ளை ரொம்ப  நேரமா காத்திருக்கிறார்" என்று சொன்னாள்.  அதற்கு அந்த பாட்டி "எனது அம்மாவை ரயிலில் அனுப்பிவிட்டு வந்தேன்" என்று சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய பாட்டிக்கு அம்மா இன்னும் இருக்கிறர்களா! அப்போ அந்த பாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


என் திருமணம்!

                              திருமணதிற்கு முதல் நாள் இரவு நங்கள் எல்ல்லோரும் ஆறுமுகநேரி பெண் வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்பொழுது எனது தாய்மாமன் திரு சன்னாசி அவர்கள் மகள் பஞ்சவர்ணத்திற்கு வயிற்று வலி என்று சொன்னாள். உடனே "நான் போய் பெண்வீட்டில் சுக்குகாப்பியோ அல்லது வெந்நீரோ வங்கி வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பெண்வீட்டில் போய் மப்பிள்ளைக்கு வெந்நீர் வேண்டுமாம் கொடுங்கள்.என்று கேட்டேன். 

                    இப்பொழுதாவது பெண்ணை பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். கையில் வெந்நீருடன் வந்த பெண் மறைவாக நின்று கொண்டு "நீங்கள் யார்?" என்று கேட்டாள். நான் மாப்பிள்ளையின் தம்பி என்று சொன்னேன்.உடனே அவள் நான் பொய் சொன்னதை தெரிந்துகொண்டாள். ஏனன்றால் அவள் அன்று  பெண் பார்க்கவந்தபோது என்னை கதவு இடைவெளியில் பார்த்திருக்கிறாள். 
அதனால் அவள் வெந்நீர் கொண்டுவந்த செம்பை திண்ணையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.  அப்பொழுதும் பெண்ணை பார்க்க முடியவில்லை.




                       29.8.1965  எங்கள் திருமணம் மிக சிறப்பாக ஆறுமுகநேரியில்  பெண்ணின் வீட்டில் நடந்தது.  காலை ஆறுமணிக்கு குளித்துவிட்டு மாப்பிள்ளைக்கு ரெடியானேன்.நான் மணமேடையில் அமர்திருந்தேன். பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பெண் மணமேடைக்கு வரவில்லை. பெண்ணின் ஒரே தம்பி ஏழு வயது கனகராஜை விளையாட்டாக அழைத்து "ஏய்! பெண்ணை சீக்கிரம் வரசொல்!" என்று சொன்னேன். அந்த சிறுவனும் வீட்டிற்குள் போயி அக்காளை சீக்கிரம் அழைத்து வாருங்கள்.என்று சொன்னான். மணமேடை முன்பு இருந்த எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. நான் எனது கழுத்திலுள்ள மாலைலிருது உதிர்ந்த ரோஜா இதழ்களை எடுத்து தின்றுகொண்டிருந்தேன். அதைப்பார்த்த பெண்ணின் தோழி ஒருத்தி "ஏய்! சீக்கிரம் வாடி! மாப்பிள்ளை ரோஜா மாலையை முழுதும் தின்று விடுவார் போலிருக்கிறது "என்று சொல்லிக்கொண்டே பெண்ணை அழைத்து கொண்டு வந்தார்கள். அப்பொழுது தான் நான் பெண்ணின் முகத்தை பார்த்தேன். பதினாறு வயதே நிரம்பிய பால் வடியும் முகம். 

                       பெண்ணின் தாய்மாமன் திரு பு. முருகபெருமாள், திரு ராமசந்திரன், திரு கோபாலகிருஷ்ணன், திரு நடராஜன், திரு மோட்டார் என்ற நடராஜன், காயல்பட்டணம் அருணாச்சலபுரம் திரு செந்திவேல் அவர்கள் மற்றும் எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். எல்லா உறவுகள், ஊர் பொதுமக்கள் முன்பாக வெகு சிறப்பாக திருமணம் நடந்தது. கெட்டிமேளம் கொட்ட பெண்களின் குலவை சத்தத்தில் தாலி கட்டினேன். பெண்ணின் அப்பா வந்து பெண்ணின் கையைபிடித்து என் கையில் கொடுத்தார். ஒரு குழந்தையின் கைப்போல இருந்தது. பின்பு ஒரு ஜீப்பில் எங்களை ஊர்வலமாக அழைத்து சென்றார்கள்.  ஒரு உறவினர் பெண்ணின் சித்தி  வீட்டு பக்கம் ஊர்வலம் போகும்போது பால் பழம் கொடுத்தார்கள்.  பெண்ணுக்கு பால் என்றாலே பிடிக்காதாம். அதனால் முழுவதும் நானே குடித்தேன்.  அன்று மாலை எங்கள் வீட்டிற்கு மீளவிட்டான் போனோம். வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி!

                            இரவு எட்டு மணிக்கு தூத்துக்குடி சித்தப்பா திரு ராமசாமி அவர்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  வளர்மதி இசைக்குழுவினரின் இன்னிசை விருந்து நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மற்றொரு சித்தப்பா திரு தங்கராஜ் அவர்களும் பாடினார்கள். பெரிய சித்தப்பா திரு பாண்டியன் அவர்களும் சித்தி பிரமு, சித்தி ராமு எல்லோரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்கள்.  மறுநாள் ஆறுமுகநேரி சென்றோம்.

                          திருமணத்திற்காக  மூன்று நாட்கள் லீவுதான் கொடுத்தார்கள். லீவு முடிந்து. விஜயநாராயணம் சென்றோம் . பெண் வீட்டார் பெண்ணின் அப்பா அம்மா, பெண்ணின் சித்தப்பா திரு புலமாடன் சித்தி லிங்கம்மாள் ஆகியோர் சீர்வரிசை  கொண்டுவந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து அம்மா, பெரிய அக்கா ஷன்முககனி, மச்சான் திரு ப.முனியசாமி,  தங்கை பாப்பா, தங்கை மாப்பிள்ளை திரு சு. ஜெயராமன், சித்தப்பா திரு எம்.ராமசாமி, சித்தி ராமு ஆகியோர் வந்தோம். விஜயனாராயனத்தில் காவலர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து பரிசுகளை தந்தார்கள். காவல்நிலையத்தில் புதிய உதவி ஆய்வாளர் திரு கிருஸ்த்துதாஸ் தலைமையில் புதிய தலைமை காவலர் திரு ராஜா மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.  மறுநாளே எங்களுடன் அம்மாவை  மட்டும் வைத்து விட்டு உறவினர்கள்  எல்லோரும் ஊருக்கு புறப்பட்டார்கள். 

                                                                                அப்போது...

Tuesday 18 October 2011

பதவி உயர்வு!

அப்போது


                           அதனால்   பஸ் ஓடவில்லை .   வெளியூர்   பஸ்கள்    மிகவும்   தாமதமாகவே   புறப்பட்டது .    தூத்துக்குடி  வந்து சித்தப்பாவிடம்   சொல்லிவிட்டு   மீளவிட்டான்   வந்தேன்.  அம்மாவுக்கு   ரொம்பவே   சந்தோசம் . 

                                 ஏழு நாட்கள்   லீவு  முடிந்து   திருநெல்வேலி   மாவட்ட   காவல்   அலுவலகத்தில் பணிக்கு ஆஜரானேன் . அப்பொழுதே எனக்கு திருநெல்வேலி ஜங்சன் பாலம்   காவல்   நிலையத்திற்கு   பணி  நியமிக்கப்பட்டது . வுதவி   ஆய்வாளர்   திரு   சார்லஸ்   என்பவர்   ரொம்பவும்   நல்லவர் .  அவர்  ஆங்கிலோ   இந்தியன் .  ஒரு வாரத்தில்   கிக்கிரகுளம்   என்ற   இடத்தில்    வாடகைக்கு   வீடு   பார்த்து   அம்மாவை   அழைத்து   வந்தேன் .   இரண்டு   மாதத்தில்   காவலர்  குடியிருப்பில்     எனக்கு   வீடு   கிடைத்து விட்டது .   காவல்  நிலையத்திற்கு   பின்னாலேயே   வீடு .   பக்கத்துக்கு   வீடுகளில்    நல்ல   நண்பர்கள் .   திருக்க்கரன்குடி திரு   மகாதேவன் ,  குரும்பூர்  தோணிபாலம்   திரு இசக்கிமுத்து  ஆகியோர்கள்   இருந்தார்கள் .   

                   திரு மகாதேவன்  தனது   இரண்டு   தங்கைகள் அற்புதமணி , கங்கா ஆகியோருடன்   இருந்தார் .   கங்கா   5 வது   வகுப்பு   படித்து  வந்தாள் .  சில  நாட்களில்    அவளை   நான் சைக்கிளில்  கொண்டுபோய்   பள்ளியில்  விட்டு  வருவேன் .   அப்பொழுது, "அவளிடம்   நீ   நன்றாக   படித்து   பெரிய   வேலைக்கு   போகும்போது   உன்   அண்ணனை   மறந்துவிடாதே   நன்றாக   கவனித்துகொள்!"  என்று   சொல்வேன். பின்னாளில்  திரு   மகாதேவன்   தனது   தங்கைகள்   அருப்புதமணியை    களக்காடு   திரு   கனகருக்கும் ,   கங்காவை    வள்ளியூர்   திரு   வரதாஸ்    ஆசிரியருக்கும்   திருமணம்   செய்துவைத்தார் .  அந்த  கங்கா   பின்னாளில்    மாவட்ட   கஜானாவில்   குமாஸ்தாவகினாள்  .   அவள்   மகன்   அலெக்ஸ்மேனன்  I.A.S.  படித்து   சட்டீஸ்கர்   மாநிலத்தில்   மாவட்ட   ஆட்சியராக   இருக்கிறான் . ஆனால் இந்த   சந்தோசத்தை   அவளால்   காணமுடியவில்லை .  அவள்   மகள் சாத்தூரில்   திருமணம்    செய்து   கொடுக்கப்பட்டு உள்ளாள்.     
எழுத்தராக பதவி உயர்வு! 

                        சில   மாதங்களில் நிலைய   எழுத்தர்   தேர்வு    நடைபெறுவதாக   இருந்தது . நானும்   அதில்   கலந்து கொள்வதற்கு   மனு   எழுதிக்கொடுத்தேன் .  அப்போது   ஆய்வாளராக   இருந்த   திரு   நடராஜன்   என்பவர்   எனது   மனுவை  எழுத்தர்   தேர்வுக்கு  சிபாரிசு   செய்யவில்லை .   இந்த   விஷயம் சர்க்கிள் ரைட்டர்  மூலமாக   நான்  தெரிந்துகொண்டேன் . உடனே   தாழையுத்து சர்க்கிள்   இன்ஸ்பெக்டர்  திரு   ஆண்டிபட்டி   நடராஜன் அவர்கள் எனது   பெரியப்பா   திரு   M.ஆண்டி அவர்களுக்கு நன்கு பழக்கம் உள்ளவர் . 

                   அதனால் அவரிடம்   போய் விஷயத்தை  சொன்னேன் . அவர்   உடனே   எனது   இன்ஸ்பெக்டருக்கு   போன்  மூலமாக "ராமசாமி எழுத்தர் தேர்வு   மனுவை ஏன்   சிபாரிசு செய்யவில்லை?"   என்று   கேட்டார் .   அதற்கு அவர் "ராமசாமியின் நடத்தை   அவர்   திறமையைப்பற்றி   எனக்கு   அதிகமாக   தெரியாது   அவர்   இந்த   ஸ்டேசனுக்கு   வந்து   நான்கு   மாதங்கள்தான்   ஆகிறது. அதனால்   அவரைபற்றி    எனக்கு   அதிகம்   தெரியவில்லை .  இப்பொழுது  நீங்கள்  சொல்வதால்   சிபார்சு   செய்துவிடுகிறேன்" என்று   சொல்லி   சிபார்சு   செய்துள்ளார் . உடனே திரு ஆண்டிபெட்டி நடராஜன்   அவர்கள்   என்னிடம் "அவர் சிபார்சு செய்துவிடுவார். நீ நன்றாக   தேர்வு   எழுது"   என்று   ஆசீர்வாதம்   செய்து அறிவுரைகள்    சொல்லி   என்னை ஊக்கப்படுத்தி அனுப்பினார்.   

                     ஒரு   வாரத்தில்   எழுத்தர்   தேர்வில்   கலந்துகொள்ள   உத்தரவு   வந்தது .   தேர்வுக்கு   சென்றேன்    முதலில்   கவாத்து  தேர்வு   வரிசையில் நிற்கும்போது ஆபீஸ்   குமாஸ்தா   வந்து   சங்கரன்   என்ற   காவலரை   உனக்கு   நான்கு   வருடம்   பூர்த்தியாகவில்லை. ஆகையால் நீ கலந்து கொள்ளமுடியாது   என்று   அவரை   வெளியேற்றினர் .  நான் கவாத்தில்    தேர்வு பெற்று   எழுத்து   தேர்விலும்    தேர்வு பெற்றுவிட்டேன் .   மாவட்டத்தில் நான்காவதாக தேர்வு பெற்றிருந்தேன். 

                           பத்து  நாட்களில்   நியமன உத்தரவு வந்தது. எனக்கு   விஜயநாராயணம்   காவல்   நிலையத்தில்   எழுத்தராக   நியமனம்   செய்யபட்டிருந்தது .   உடனே   நண்பர்களிடம்   விடைபெற்று   அம்மாவை   அழைத்துக்கொண்டு   வீட்டை   காலிசெய்து   சாமான்களையும்   எடுத்துகொண்டு   மீளவிட்டான்   வந்தோம் . மறுநாள்  தூத்துக்குடி   போய்   சித்தப்பாவிடம்   சொன்னேன் .   அப்பொழுது சித்தப்பா "அங்கே   எனக்கு   மிகவும்   தெரிந்த ஏழான்கால் மாடசாமி   என்பவர்   இருக்கிறார் .   அவரிடம்   உன்னை  அறிமுகம்   செய்து   வைக்கிறேன் .   நாளைக்கே   போகலாம்"   என்று   சொன்னார் .   

                       அதன்படி   மறுநாள்   விஜயநாராயணம்   சென்று   திரு ஏழான்கால் மாடசாமி   என்பவரை   பார்த்து   சித்தப்பா   சொன்னார்கள் .   அவரும் "தம்பி   பயம்   வேண்டாம் .   நீ   வா   நான்   பார்த்துகொள்கிறேன்"  என்று   சொன்னார் .   அப்பால்   உதவி   ஆய்வாளர்   திரு செய்யது   ஷேரிப்புடீன்   அவர்களை   சந்தித்தோம்.  "அவர்   சீக்கிரம்   வந்து   பணியில்   சேருங்கள்" என்று சொல்லியனுப்பினார் .  மணி   இரவு    பத்து   மணியாகிவிட்டது .   இதற்குமேல்   பஸ்   இருக்காதே   என்று   எண்ணிக்கொண்டு   தெற்கு   விஜயநாராயணம்   சென்றோம் .   அங்கே   பஸ்கள்   போய்க்கொண்டிருந்தது. அன்று   வைகாசி   விசாகம்   என்பதால்   பஸ்ஸில்   கூட்டம்   அதிகமாக இருந்தது .   இரவு   12 மணிக்கு  திருச்செந்தூர்   பஸ்   கிடைத்தது .  அதில் ஏறி   திருச்செந்தூர்   வந்தோம் . கோவில்    கலையரங்கத்தில்   சிறிது  நேரம்    தங்கி   இருந்துவிட்டு    அதிகாலை   பூஜையில்   கலந்துகொண்டு   ஸ்ரீ   முருகபெருமானை  வணங்கி   அவர் அருள்  பெற்று ஊருக்கு   புறப்பட்டோம் .   

பெண் பார்த்தேன்!

                          நடந்தே   ஆறுமுகநேரி   செல்வரஜபுரம்   வந்து   ரயில்வே   கேட்  அருகில்   ஒரு   காப்பி   ஹோட்டலில்   காப்பி   குடித்து கொண்டிருந்தோம் .   அப்பொழுது   சித்தப்பாவுக்கு   தெரிந்த   பாட்டி  ஒருவர்   அங்கு  இருக்கிறார். அவர்   வீடு   எங்கே இருக்கிறது   என்று   விசாரித்தோம் .  அப்பொழுது ப்ளுவூத் முத்தையா என்பவர் "அந்த  பாட்டி   இப்பொழுது   இங்கில்லை" என்று   சொல்லிவிட்டு   என்னைப்பற்றி   சித்தப்பாவிடம்   விசாரித்தார் . தம்பிக்கு   திருமணமாகிவிட்டதா?" என்று   கேட்டு "இங்கே   ஒரு   நல்ல   பெண்     இருக்கிறது   வாருங்கள்   நான்   காட்டுகிறேன்" என்று   எங்களை   பெண்கள்   குளித்து  கொண்டிருக்கும் ஒரு   கிணற்றுக்கு   கூட்டிச்சென்றார் .   அப்பொழுது   மூன்று   பெண்கள்   குளித்துவிட்டு   தண்ணீர்குடம்   சுமந்து   சென்று கொண்டிருந்தார்கள் . "அதோ   மூன்றவதாக   ஒரு   பெண் போகிறாளே அந்த   பெண்தான்"   என்று    பின்பக்கமாக   காட்டினார்.  "நீங்கள்   விரும்பினால்   அவர்கள்   வீட்டிற்கு   கூட்டிசெல்கிறேன். வாருங்கள்"  என்று அந்த பெண்ணின்  பக்கத்து   வீட்டிற்கு   கூட்டிசென்றார். 

                          அந்த   பக்கத்து வீட்டு   முத்தம்மாள்   என்பவர் "அதோ   சேலையை   காயப்போட்டுக் கொண்டிருக்கிறாளே அவள்தான்.   அப்பவும் பின்பக்கம்தான்   பார்க்கமுடிந்தது .   முத்தம்மாள்    அந்த பெண்ணிடம் " ராஜகனி   எங்கள்  வீடுவரை   கொஞ்சம்  வந்து உயரே பரணில்   ஒரு சாமான் இருக்கிறது. எனக்கு   எட்டவில்லை. நீ வந்து எடுத்து   தந்துவிட்டு வா" என்று சொன்னாள்.  அது  எங்களுக்கும் கேட்கிறது . ஆனால்   அந்த பெண், " உங்கள்  வீட்டில்   ஆட்கள்   சத்தம்   கேட்கிறதே.   யார்  அவர்கள் ?  நான் வரமாட்டேன்" என்று   சொல்லிவிட்டாள். முத்தம்மாள்   எவ்வளவோ   எடுத்து   சொன்னாள். "அது   எங்கள்   சொந்தக்காரர்கள். ஊரிலிருந்து வந்துள்ளார்கள். நீ தயவு  செய்து வந்து   எடுத்து கொடுத்துவிட்டு வாயேன் " என்று சொல்லி பார்த்தாள்.  ஆனால்   அந்த பெண் வர  மறுத்து  விட்டாள்.   "நீங்கள்   இன்னொருநாள்   வாருங்கள். நான்   அவர்கள் அப்பா அம்மாவிடம்  சொல்லிவைக்கிறேன் . நல்ல இடம் ஆதனால்   கட்டாயம் வாருங்கள்"   என்று   முத்தையாவும்   சொன்னார் .   அதனால்   நானும்   சித்தப்பாவும்   நல்லூர்   அக்கா வீட்டிற்கு   போய்விட்டு ஊருக்கு போவோம்   என்று   ரயில்வே  தண்டவாளத்தின்   வழியாக   நடந்தே   போனோம் .   அப்பொழுது   பின்னால்   ஒருவர், "அய்யா! அய்யா! " என்று   எங்களை கூப்பிட்டுக்கொண்டே  வந்தார்.
                                                                      அப்போது ..........        

Monday 17 October 2011

திருநெல்வேலிக்கு மாறுதல்!

அப்போது.......                            

                            அம்மாவிடம் விஷயத்தை சொன்னவுடன் அம்மாவுக்கு  ரொம்பவும் சந்தோசம். அம்மாவிடம் ஏற்கெனவே ராமன்துறை   கணக்கப்பிள்ளை   வீட்டைப்பற்றி   சொல்லியிருக்கிறேன்  .  அம்மா   எங்களை  அந்த  வீட்டுக்கு   கூட்டிபோயேன்  என்று சொன்னார்கள் . ஒரு ஞாயித்துகிழமை   அம்மாவையும்    தங்கை  பாப்பாவையும்   அங்கே  அழைத்து  சென்றேன் .  அம்மாவுக்கு அவர்களையும்   அவர்கள்  மகள்   ரோஸ்மேரியையும் ரொம்ப   பிடித்துவிட்டது   என்று  நினைத்தேன் .   வீட்டிற்கு   வந்தவுடன்   அம்மா   என்னிடம் "இங்கல்லாம்  உனக்கு   பெண்பார்க்க கூடாதப்பா! ஏழையோ   பாழையோ   நம்ம   ஊர்பக்கம்தன்  பார்க்கவேண்டும்"  என்று சொன்னார்கள் . "அதற்கு   இப்போ   என்னம்மா  அவசரம்" என்று சொல்லிவிட்டேன் .

                          இரண்டு நாட்கள் கழித்து ராமன்துறை சென்றேன் .  ரோஸ்மேரியை சந்தித்து "அம்மா என்ன  சொன்னார்கள். நீங்கள்   எதாவது   அம்மாவிடம்  சொன்னீர்களா ?"   என்று கேட்டேன் . " நாங்கள்   ஒன்றும்   சொல்லவில்லை. உங்கள்  தங்கைதான்   எங்கள்   அண்ணன்   உங்களை  விரும்புகிறானா ?   என்று கேட்டாள் .   "நானும்   ஆமாம்   என்று சொன்னேன் . மேலும்    எங்கள் வீட்டில்    எல்லோரிடமும்    சம்மதம்   வாங்கி   விடுறேன் "  என்று   சொன்னாள் .   "இல்லம்மா முதலில்   என்   தங்கைக்கு  திருமணம்    நடக்கவேண்டும்   அப்புறம் என் சித்தப்பாவுக்கும் என் அம்மாவுக்கும்   உன்னை   பிடிக்கவேண்டும்"  என்று சொன்னேன் . "அப்போ   உங்கள்  சித்தப்பாவை   வரசொல்லுங்கள்   அல்லது   அவருடைய   விலாசம்  கொடுங்கள்   நான்   லெட்டர்   எழுதுகிறேன்   என்று   சொன்னாள்.  சித்தப்பாவின்   விலாசத்தை   அவளிடம்   கொடுத்துவிட்டு   விரைவில்   எனக்கு   திருநெல்வேலி    மாவட்டத்துக்கு   மாறுதல் வந்துவிடும்   என்று சொல்லிவிட்டு  வந்தேன் .         

கள் இறக்கியவன் சம்பவம் !

                      ஒருநாள்   குழித்துறை   நீதிமன்றந்தில்   ஒரு   ருசிகரமான   சம்பவம்   நடந்தது .   திருவட்டார்   காவல்நிலையத்திலிருந்து     ஒரு நபர்   பனைமரத்திலிருந்து  கள்   இறக்கியதாக   அந்த   நபரை   நீதிமன்றம் கொண்டுவந்தார்கள்  .  அந்த     நபரிடம்  நீதிபதி "நீ பனைமரத்தில்    கலயம் கட்டி கள் இறக்கிக்யதாக   உன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . அதற்கு நீ என்ன  சொல்லுகிறாய் ? " என்று கேட்டார் .   அதற்கு   அவன்   ஆமாம்  அய்யா   உண்மைதான்  என்று சொன்னான் .  " இதற்கு முன்பு இப்படி ஏதாவது தப்பு   செய்திருகிறாயா" என்று கேட்டார் .  அவன்   சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "அய்யா ஒரே  ஒரு  தடவை   மட்டும்   கள் இறக்கும்போது   அதோ   உட்கார்ந்திருகிறாரே   அந்த   ஏட்டு அங்கேயே பிடித்து   நூறு   ரூபாய்    அபராதம்   போட்டார்.   அங்கேயே   பணத்தை  கட்டிவிட்டேன். அது   தவிர   வேறு  எதுவும்   செய்ததில்லை  என்று அப்பாவியாய்   சொன்னான் .   உடனே   நீதிமன்றத்தில்    இருந்தவர்கள்   அனைவரும்   நீதிபதி   உள்பட   அனைவரும்   குபீரென்று   சிரித்தார்கள் . அந்த   குறிப்பிட்ட   ஏட்டய்யா   இவன்   பொய்   சொல்லுகிறான்   என்று முனங்கிக்கொண்டே   நழுவி   நீதிமன்றத்தை  விட்டு  வெளியே   சென்று  விட்டார் . அப்பாவியான   அந்த நபருக்கு நீதிபதி அவர்கள்   நூறு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள் .  

                         நாகர்கோயில்   மாவட்ட   காவல்   அலுவலகத்தில்   காவலர்   தேர்வு    நடந்தது .   தம்பி   ராமலிங்கத்தை   வரவழைத்து   தீர்வுக்கு   அழைத்து  சென்றேன் .   அப்பொழுது   காவல்கண்காணிப்பாளர்    திரு   R.ராஜகோபால்  அவர்கள். ஆனால்   தேர்வில்   உயரத்தில்   ஒன்டரை   அங்குலம்   குறைந்து விட்டது .  அப்பொழுது    கடலூரில்   ஒருவன்   உயரம்   குறைந்ததற்கு   அவன் சுவரிலே   தலையை   முட்டி   வீங்க   செய்து    அரை   அங்குலத்தை   சரி  செய்தது    நினைவு    வந்தது. ஆனால்    இது    ஒன்றரை   அங்குலம் குறைவு   மேலும்   அந்த விபரீத   செயலை   நான்  விரும்பவில்லை . புதுக்கடை   வந்து   இரண்டு  நாட்கள்   கழித்து   தம்பி   ராமலிங்கத்துடன்   அம்மாவையும்   தங்கையையும் ஊருக்கு    அனுப்பிவைத்தேன் .


தங்கையின் திருமணம்!

                      அவர்கள் ஊருக்கு வந்த   ஒரு   மாதத்தில்   தங்கைக்கு   திருமண   ஏற்பாடுகள்   நடந்தது .  அம்மாவின்   பாலிய  சினேகிதி    திருமதி   மொட்டியாம்மா    திரு  சுடலை   அவர்கள்  இளைய  மகன்   திரு ஜெயராமன். திருமணமானது    சித்தப்பா, அத்தான் திரு முனியசாமி , ஆகியோர்   ஏற்பாட்டின்படி    மாப்பிள்ளையின்   சகோதரர்கள்   திரு   சந்தனசாமி , திரு சித்திரவேல், திரு சிதம்பரம் மற்றும் அவர்கள்   சகோதரிகள்    ஆகியோருடன்    பேசினார்கள்.  அவர்கள்   எல்லோருக்கும்    தங்கை   பாப்பாவை   பிடித்துவிட்டது .  மாப்பிள்ளை  விருதுநகரில்   ஒரு பேப்பர் மில்லில்   வேலைபார்த்தார்  .   திருமணம்   நல்லபடியாக  முடிந்து   அவர்கள்   விருதுநகரில்   குடியேறினார்கள் .  நானும்  ,  அம்மா  , அண்ணன் லக்ஷ்மணன்  ,  தம்பி   ராமலிங்கம்  ஆகியோர்   சீர்வரிசையுடன்   சென்று   தனிக்குடித்தனம்  வைத்தோம் .  அங்கு   25 போஸ்ட் கார்ட்கள்   25  வாங்கி   எல்லாவற்றிலும்   எனது   விலாசத்தை   எழுதி   தினசரி   ஒரு லெட்டர்   எழுதிப்போடு   என்று  சொல்லிவிட்டு   பிரியா   விடைபெற்று ஊருக்கு  வந்தோம் .  


திருநெல்வேலிக்கு மாறுதல்!

                 லீவு  முடிந்து   புதுக்கடை   வந்து  பணியில்  சேர்ந்தேன். ஒரு  வாரத்தில்   அதாவது   ஜூன்   மாதம்   1964 எனக்கு   திருநெல்வேலி   மாவட்டத்திற்கு   மாறுதல்   உத்தரவு   வந்தது .  உடனே    ராமன்துறை   வந்து   கணக்கபிள்ளை  வீட்டில்   எல்லோரிடமும்  சொலிவிட்டு  வந்தேன் .   காவல்நிலையத்தில்   எனக்கு   பிரிவுபசார   விழ   நடந்தது .  காவலர்   நண்பர்களிடமும், தமிழ்   பண்டிட்   திரு   அன்பையா  சார்   வீட்டில், ஆசிரியர்  திரு லீநோஸ்  , சலூன்கடை    சதாசிவம்    மற்றும்   போஸ்ட்   ஆபீஸ்   திரு   ராஜபாண்டியன்    அனைவரிடமும்    சொல்லிவிட்டு    திருநெல்வேலிக்கு    புறப்பட்டேன் .   அன்று   கில்லிகோடு போலீஸ்  ஸ்டேசனில்   ஏதோ   ஒரு   வழக்கில்   சம்மந்தப்பட்ட   ஆசிரியர்களை   கைவிலங்கு   போட்டு   கோர்ட்டுக்கு   கொண்டுபோனது   சம்மந்தமாக   பெரிய   பிரச்சனையாகி   மாவட்டம்   முழுவதும்   ஆர்ப்பாட்டங்கள்   நடந்தது .

                                                                              அப்போது.......