Monday 14 November 2011

சினிமா படப்பிடிப்பு!

அப்போது...

                        தலையில் எந்த அடியும் படவில்லை. என்ன ஆச்சர்யம் அவன் விழுந்த அந்த இடத்தில் அந்த பாறை சற்று கீழே அமுங்கி இருந்தது. அதுபோல குழந்தையும் சிறிது நேரத்திலேயே சிரித்து விளையாட ஆரம்பித்தான். இறைவனுக்கு நன்றி.

மீண்டும் பதவி உயர்வு !


                           1969 ஜனுவரியில் எனக்கு மீண்டும் தலைமைக்காவலர் பதவி உயர்வு வந்தது. இப்பொழுது நான்  புளியரையில் அரிசி கடத்துபவர்களை கண்காணிக்கும் தணிக்கை சாவடிக்கு மாற்றப்பட்டேன். மாறுதல்  ஆர்டர் கிடைத்த மறுநாளே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று ஊருக்கு புறப்பட்டேன். ஆறுமுகநேரி போய் பணியில் சேருவதற்காக வழங்கும் விடுப்பு (Joining Time leave) ஏழு  நாட்களையும் ஆறுமுகநேரியிலும்,மீளவிட்டானிலும் கழித்துவிட்டு நான்மட்டும் புளியரைக்கு சென்றேன். அங்கு பணியில் சேர்ந்ததும் புளியரை மலைக்குகைக்குள் ரயில் செல்லும் பாதை (Tunnel Check post) ஆரம்பிக்கும் இடத்தில் மலைக்காட்டுக்குள் ஒரு ஓலை செட்டு அமைத்து அரிசியை கேராளாவுக்கு கடத்துபவர்களை கண்காணிக்கவேண்டும். என்னுடன் காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன், பிச்சையா தேவர் ஆகியோரும் இருந்தார்கள். அவ்வப்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் திரு ஹென்றி பாண்டியன் அவர்கள் எங்களை செக் செய்ய வருவார்கள். அரிசி கடத்துபவர்கள்
இரவில் மலைமேல் கரடு முரடான வழியாகத்தான் கடத்துவார்கள். 

                     புளியரையில் திரு சுப்பையா தேவர் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வீடு பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊரில் போய் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய கொஞ்சம் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

செக் போஸ்ட் வேலை!  
                   
                     ஒருநாள் காவலர் பிச்சையா தேவரை செக் போஸ்டில் வைத்துவிட்டு நானும், காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன் ஆகியோர் மலை உச்சிக்கு போய் இரவு ஒரு மணிக்கு பதுங்கி இருந்தோம். காவலர் கோதண்டராமன் ஒரு பீடிபிரியர் புகை பிடிக்காமல் இருக்கமாட்டார். இந்த பீடிப்புகை வாசனையை உணர்ந்தே கடத்தல்காரர்கள் ஓடிவிடுவார்கள். அன்றும் அதைப்போல் ஓடிவிட்டனர்.அவர்கள் கொண்டுவந்த அரிசி மூட்டைகளை ஆங்கங்கே போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.              


பிடிபட்ட அரிசி மூட்டைகள்!

                                   விடியும்வரை மலையிலேயே காத்திருந்துவிட்டு காலையில் புளியரைக்கு போய் கூலியாட்களை அழைத்துவந்து அரிசிமூட்டைகளை அந்த மலையின் செடி கொடிகளுகிடையில் தேடி எடுத்தோம். ஏழு சிறு மூட்டைகள்தான் கிடைத்தது. அவைகளை எடுத்துவந்து கோர்ட்டுக்கு அறிக்கை தயார்செய்து செங்கோட்டை கோர்ட்டுக்கு கொண்டுபோனோம்.கனம் கோர்ட்டார் அவர்கள் "ஏன் கைதிகளை பிடிக்கவில்லை" என்று கேட்டார். இரவு நேரமானதாலும் மலையுச்சி செடிகொடிகள் நிறைந்த காடு என்பதாலும் அவர்கள் தப்பிவிடுகிறார்கள். என்று சொன்னேன். உடனே கோர்ட்டார் அவர்கள் என்னை சிறிது நேரம் உற்று கவனித்தார். திடீரென்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார். 

                               சற்று நேரத்தில் மதிய இடைவேளையின் போது கோர்ட் சேவகர் வந்து "உங்களை ஐயா அழைக்கிறார். வாருங்கள்" என்று அழைத்தார். கணம் நீதிபதி ஐயா அவர்கள் எதற்காக என்னை அழைக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. கோர்ட் சேவகரை வருகிறேன் போங்கள் என்று அனுப்பிவிட்டு குழப்பமாக அவரை சென்று பார்த்தேன்.

நீதிபதி  ஐயா!

                     அப்போது அவர் " நீர் புதுக்கடையில் இருந்த ராமசாமி தானே! என்னை தெரியவில்லையா ? என்று கேட்டார்.  அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழித்துறை கோர்ட்டில் இணையம் புத்தன்துறை வழக்கில் எதிரிகளுக்காக வாதாடிய வக்கீல் திரு தியாகராஜன் என்பது தெரிந்தது. "ஆ! ஐயா!  நீங்களா! எப்போது நீதிபதியானீர்கள்?"  என்றேன்.  உடனேயே என்னை உட்காரவைத்து புதுக்கடை SI சங்கரபாண்டியன் மற்றும் ஆய்வாளர் பாலகிருஸ்ணன் நாயர் ஆகியோர்களை நலம் விசாரித்தார். அப்பால் அரிசி மூடைகளை ஒப்படைத்துவிட்டு புளியரைக்கு வந்தேன். 

சினிமா படப்பிடிப்பு!

                    ஒரு நாள் புளியரை ரயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு நடக்கிறதாம் போய் பார்ப்போமே என்று என் மனைவி கூறினாள். சரி என்று குழந்தையை எடுத்துகொண்டு  புளியரை ரயில் நிலையம் போனோம். அங்கே இந்தி நடிகை ஹேமமாலினி நடித்த ஒரு இந்தி படப்பிடிப்பை பார்த்தோம். தெரிந்த போலீஸ்காரர்கள்  உதவியுடன் மிகவும் அருகில் நின்று படப்பிடிப்பை ரசித்துக்கொண்டிருந்தோம்.  எனது குழந்தையை பார்த்த நடிகை ஹேமமாலினி அருகில் வந்தார் குழந்தையை தூக்க முயற்சித்தார்.  அவன் போகவில்லை .  அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி எல்லோரிடமும் அதை சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தாள்.

                      அன்று மலையில் செங்கோட்டை அருகிலுள்ள திருமலை குமாரசாமி கோயிலுக்கு போனோம். எனது இரண்டு வயது மகன் முத்துகுமரன் அப்போதெல்லாம் கோவிலை சுற்றி வருவதென்றால் அவன் மிகவும் வேகமாக "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே  தத்தித்தத்தி நடந்து கோவிலை சுற்றி வருவான். கர்ப்பகிரகத்தில் சாமிக்கு மகன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.

புதிய குழப்பம்!.
                      மறுநாள் நான் டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தேன் அப்பொழுது ஏன் மனைவி சொன்னாள். ஒரு காவலர் திருநெல்வேலி மாவட்ட தனிபிரிவில் இருந்து வந்ததாகவும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் உடனேயே என்னை வரச்சொன்னதாக சொல்லிவிட்டு சென்றதாக சொன்னாள். என்ன விஷயம் என்று சொல்ல வில்லை . அன்று இரவு முழுதும் தூக்கமே இல்லை . ஒரு வேளை அம்பாசமுத்திரம் சர்க்கிள் ஆபீசில் நாம் எழுத்தராக இருக்கும்போது  பதிவேட்டில் ஏதேனும் தப்பு நடந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்து வருந்திகொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும். கவலைப்படாதீர்கள் என்று சொன்னாள் காலையில் முதல் பஸ்ஸில் திருநெல்வேலி புறப்பட்டேன். திருநெல்வேலி தனிப்பிரிவு அலுவலகம் சென்று ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்தேன்.

                                                                                                                 அப்போது..........

Saturday 12 November 2011

மகன் முத்துக்குமரன் எழுந்தான்! !

அப்போது.....
                       
                         சிறிது நேரத்தில் என் மனைவி அவளுடைய சொந்த பந்தங்களுடன் வந்தாள். சில காரணங்களினால் தாமதமானதை பயத்துடன் கூறினாள் . அதுவும் சரிதான் என்று சமாதானம் ஆகினேன். 

                      காரியங்கள் முடிந்து சில நாட்களில் அண்ணன் லட்சுமணன் வீட்டில் அம்மா இருந்துகொண்டார்கள். நான் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் வந்தேன். கூடவே என் மாமியாரும் வந்தார்கள்.  அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் சிவன் ஏட்டையா வீட்டில் வாடகைக்கு இருந்தோம். 

காவல் நிலையத்தில் .......

             சில மாதங்களில் ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் மாற்றப்பட்டு திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.அப்பொழுது அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளராக  இருந்த திரு கே.குருவையா அவர்களுக்கும் ஆய்வாளர் திரு விஜயராமசந்திரன் அவர்களுக்குமிடையே நல்ல அபிப்ராயம் உண்டு. இந்த  ஆய்வாளரிடம்  தான் நான் நல்ல பல விசயங்களை தெரிந்து கொண்டேன். அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், யார் யாரிடம்  எப்படி பேசவேண்டும் என்பதுபோன்ற நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். சில தினங்களில் அவர்கள் குடும்பமும் வந்துவிட்டது. கீழரதவீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் மனைவியின் சொந்தஊர் திருநெல்வேலி. அங்கு திரு சிவசுப்ரமணி நாடார்.Ex.M.L.C.அவர்கள் மகள். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லோரும் மிகவும் நல்லவர்கள். இவர் ஆய்வாளராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.  காரணம்  இவருடைய அறிவுரையின்படி சர்க்கிளிலுள்ள எல்லா உதவி ஆய்வாளர்களும் மிகவும் திறமையாக பணியாற்றி குற்றங்கள் அதிகம் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கைதியின் மரணம் !

                           ஒரு தடவை விக்கிரமசிங்கபுரத்தில் கைதி ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாக விக்கிரமசிங்கபுரம் உதவி ஆயிவாளர் திரு குருசுமுத்து அவர்கள் காலையிலேயே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களை பார்த்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டார். அப்பொழுது அவருக்கு சொன்ன அந்த அறிவுரைகள் பின்னாளில் நான் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ஆய்வாளராக இருந்தபோது எனக்கு மிகவும் உதவியாகவும் பொதுமக்களிடம் நற்பெயரையும் பெற்றுத்தந்தது.மனிதன் செல்வம், செல்வம் என்று ஆசைபடுவது இயற்கைதான். ஏனென்றால் ஒருவனை செல்வத்தை வைத்துத்தான் எடைபோடுகிறார்கள்.மனிதன் செல்வத்தை சேர்த்து எவ்வளவு உச்சிக்குபோனாலும் அவன் அங்கேயே தங்கிவிடமுடியாது.

                         ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக அன்பாகவே நடந்துகொள்வார். தனக்கு கீழ் பணிபுரியும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்குவதில் சற்று கடுமையாகவும் இருப்பார்.  காவல்நிலையங்களுக்கு ஆய்வு செய்ய போகும்போது என்னையும் கூடவே அழைத்து செல்வார்.அவரது ஆய்வு அறிக்கையை நான் குறிப்பெடுத்து கொள்வேன்.

மேற்படிப்பு!

                          எட்டாவது வகுப்பே படித்திருந்த நான் மேற்கொண்டு படித்து எப்படியாவது ஒரு பட்டம் வாங்கவேண்டும் என்ற ஆவல் என் அடிமனதில் துளிர்விட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் காவலர் வேலைக்கு எட்டாவது வகுப்பு மட்டும் படித்திருந்தாலே போதும். அனால் அவரது திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் பயிற்சி கல்லூரியில் (Tutorial college) சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மேலும்  ஆய்வாளரின் அறிவுரையின்படி தட்டச்சு பயிற்சியிலும் (டிபே writting) சேர்ந்தேன். ஆனால்  நேரம்தான் ஒத்துவரவில்லை. அதனால் அந்த பயிற்சி கல்லூரியில் நான் எனக்கு வசதியான நேரத்தில் எப்பொழுது வந்தாலும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அந்த பயிற்சி கல்லூரி நடத்தும் நிறுவனரிடம் அனுமதி பெற்றேன். அதன்படி மிகவும் சிரத்தையோடும், அக்கறையோடும் பயின்று வந்தேன். 

மகன் முத்துக்குமரன் விழுந்தான்!   
      
                   ஒருநாள் எனது ஒன்றரை  வயது மகன் முத்துக்குமரனை சைக்கிள் பின்சீட்டில் உட்காரவைத்து நான் சைக்கிளை தள்ளினேன். எனது மகன் பின்சீட்டிலிருந்து மல்லாக்க கீழே விழுந்தான். கீழே கல்பாறை அதன்மேல் விழுந்தவுடன் நான் கதறிவிட்டேன். ஐயோ என்று அலறி சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு குழந்தையை தூக்கினேன். "தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை கீழே விழுந்து விட்டானா?" என்று  என் மனைவியும் வீட்டிக்குள்ளிருந்து ஓடிவந்தாள். என் மகனை தூக்கி தலையில் தடவி பார்த்தேன். மனது முழுதும் வேதனை. துக்கம் தொண்டையை அடைத்தது. 
                                                                                                               அப்போது......      

Friday 11 November 2011

மகன் முத்துகுமரன் பிழைத்தான்!

அப்போது .......... 

                      சிறிது நேரம் கழித்து பேயன்விளை போய் டாக்டர் அய்யாதுரை என்பவரை கூட்டிவந்தேன். அவர் குழந்தையின் காதைப்பிடித்து தூக்கினார். அப்பொழுதும் குழந்தை அழவில்லை. ஆ....என்று வாயை திறந்தான். ஆனால் அப்பொழுதும் குழந்தை அழவில்லை. உடனே ஒரு ஊசி போட்டார். டாக்டரிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மருத்துவச்சி அம்மாவோ "பயப்படவேண்டாம். டாக்டர் என்ன டாக்டர் நான் சொல்கிறேன். இன்று இரவே குழந்தை அழுவான் பால் குடிப்பான். நான் இதுபோல நூறு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பயப்படவேண்டாம்" என்று சொன்னார்கள்.

அழுது சிரிக்கவைத்தான்! 

                          அது போலவே குழந்தை இரவு நன்றாக அழுதான். பாலும் குடிக்க ஆரம்பித்தான்.அப்போது தான் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை பார்க்க முடிந்தது. எங்கள் எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். மறுநாளே தூத்துக்குடி சென்று சித்தப்பா, சித்தி, மீளவிட்டானில் அம்மா,  சின்னக்கா, அண்ணன்கள் மற்றும் எல்லோரிடமும் குழந்தை பிறந்த விஷயத்தை  சொல்லிவிட்டு நல்லூருக்கு போய் பெரியக்கா, மச்சான் திரு முனியசாமி அவர்களிடமும் சொல்லிவிட்டு ஆறுமுகநேரி வந்தேன். விருதுநகருக்கு தங்கை பாப்பாவுக்கும் குழந்தை பிறந்த செய்தியை லெட்டர் எழுதினேன். அனைவரும் மறுநாளே வந்து குழந்தையை பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து சென்றார்கள். ஒரு வாரம் குழந்தையுடன் நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. லீவு முடிந்து அம்பாசமுத்திரம் வந்தேன்.

சர்க்கிள் ஆபிஸ் எழுத்தர்!

                           வந்தஉடன் என்னை சர்க்கிள் ஆபீசில் எழுத்தராக இருக்கும்படி ஆய்வாளர்  சொன்னார். அதன்படி எழுத்தராக பணிபுரிந்தேன். ஏற்கனவே சர்க்கிள்  எழுத்தராக இன்னொரு ராமசாமி நியமிக்கப்படிருந்தார். அவருக்கு உதவியாக தலைமை காவலர் திரு தில்லை சிதம்பரம் அவர்களுடன் நானும் சேர்ந்து வேலை பார்தேன். இந்த சர்க்கிளுக்கு அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம், பாப்பாகுடி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி ஆகிய காவல் நிலையங்களும்  மாஞ்சோலை   மணிமுத்தாறு ஆகிய புறக்காவல் நிலையங்களும் சேர்ந்தது. 

                               அம்பாசமுத்திர காவல் நிலையத்திற்கு திரு குளத்து அய்யர் மாற்றப்பட்டு திரு குமாரவேல் அவர்கள் உதவி ஆய்வாளராக இருந்தார். விக்கிரமசிங்கபுரத்திற்கு திரு குருசுமுத்து அவர்களும் பாப்பாகுடிக்கு திரு பால்தேவதாஸ் அவர்களும் வீரவனல்லூருக்கு திரு முகமது காசிம் அவர்களும் சேரன்மகாதேவிக்கு திரு சுந்தரம்பிள்ளை அவர்களும் உதவி ஆய்வாளராக இருந்தார்கள். மாஞ்சோலை புறக்காவல் நிலையத்திற்கு திரு முருகையா அவர்களும் மணிமுத்தாறு புறக்காவல் நிலையத்திற்கு திரு ராஜாராம் நாயுடு அவர்களும் தலைமை காவலர்களாக இருந்தார்கள். 

                                 இவர்கள் அனைவரும் அவர்கள் காவல் நிலைய எழுத்தர்களும் ஒவ்வொரு  வாரமும் நடக்கும் வாராந்திர கூட்டத்திற்கு சர்க்கிள் ஆபீஸ் வரவேண்டும். அப்பொழுது குற்ற வழக்குகளை பற்றியும் கண்டுபிடிப்பதில் உள்ள முன்னேற்றம் பற்றியும் ஆராயப்படும். 

அக்கா இறந்தார்!

                              எனது மகன் முத்துகுமரன் பிறந்த மூன்றாவது மாதம் நல்லூரில் எனது பெரிய அக்கா திடீரென இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பன்னீர்செல்வம் - பதினைந்து வயது . சித்திரைக்கனி - ஏழு வயது . கந்தசாமி - ஐந்து வயது. உடனேயே லீவு சொல்லிவிட்டு நல்லூருக்கு சென்றேன். நான் நல்லூருக்கு வந்த பிறகும் கூட பக்கத்து ஊரில் இருந்த என் மனைவியும் குழந்தையும் அங்கு வந்து சேரவில்லை. எனக்கு கோபமாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையோ என்று கவலையாகவும் இருந்தது.

                                                                                                           அப்போது.........

Tuesday 8 November 2011

மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

அப்போது....  

                            பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னவுடன்     இந்திரா காந்தி என்று பெயர் வைத்தோம். மறுநாள் அம்பாசமுத்திரம் வந்ததும் எனக்கு சற்று உடம்புக்கு  சரியில்லை மனைவியிடம் சொன்னால் அன்று முழுவதும் சாப்பிட மாட்டாள் , ஆகையால் நானே சித்ரா ஸ்டூடியோ  விற்கு எதிரில் இருக்கும் டாக்டர் ரகுபதியிடம் சென்றேன். அவர் மிகவும் கைராசிக்காரர். ஒருவேளை மருந்து கொடுத்தாலே வியாதி குணமாகிவிடும். ( பின்னாளில் அவருடைய பேத்தியே எனது மூன்றாவது மருமகளாக வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை). 

                         இரண்டாவதாக மனைவி கருவுற்றாள். ஆறாவது மாதம் அவள் அம்மா வந்து, முதல் குழந்தை அப்படியாகிவிட்டது (குறைப்பிரசவம்) ஆகையால் இப்பொழுது நான் ஊருக்கு மகளை கூட்டிசெல்கிறேன் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி நானே கூட்டிச்சென்று ஆறுமுகநேரியில் கொண்டு விட்டுவந்தேன்.

பதவி இறக்கம் 

                               ஆய்வாளர் திரு வேலப்பன் அவர்கள் மாற்றப்பட்டு திரு காசி அருணாசலம் அம்பாசமுத்திரம் வந்தார்.ரொம்பவும் கறாராக இருப்பார். ஆனால் நல்லவர். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு பதவி இறக்கம் வந்தது. பதினைந்து மாதங்கள் தலைமைகாவலராக பணிபுரிந்துள்ளேன். திடிரென்று வந்த இந்த பதவி இறக்கம் என்னை ரொம்பவே பாதித்தது (for want of vacancy). அதாவது உதவி ஆய்வாளராக ஆனவர் தலைமை காவலராகவும், தலைமை காவலராக ஆனவர் எழுத்தராகவும் பதவி இறக்கம் வருவது காவல் துறையில் அப்போதைக்கப்போது நடைபெறுவது சகஜமானதுதான். 

                   அப்போது ஒருதடவை ஒரு வழக்கில் எதிரியை தேடி திசையன்விளை என்ற ஊருக்கு போனேன்.அப்போது ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்த ஊரிலிருக்கும் அவர்கள் அம்மா அப்பாவை பார்த்து விட்டு வரும்படி சொன்னார்கள். அதன்படி திசையன்விளை வந்து தேடிவந்த எதிரியைப்பற்றி விசாரித்தும் நல்ல தகவல் கொடுப்பவர்களை நியமித்தேன். ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்தஊர் திசையன்விளை அருகிலுள்ள ராமன்குடி இருப்பு. திசையன்விளையிலிருந்து சுமார் மூன்று கிலோமிட்டேர் தூரம் உள்ளது. ஆனால் திசையன் விளையிலேயே  இரவாகிவிட்து .    

என்ன வர்ணம்?

                                ஒரு கடைசி பஸ்ஸில் ராமன்குடி இருப்புக்கு வந்தேன். அங்கே அவர்கள் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தேன். ஆய்வாளர் கொடுத்தனுப்பிய பொருட்களை கொடுத்துவிட்டு "நான் புறப்புடுகிறேன்" என்று சொன்னேன். அனால் இப்பொழுது "பஸ் கிடையாதே இனி காலையில்தான் திருசெந்தூர் பஸ் உண்டு.ஆகையால் இங்கு தங்கிவிட்டு காலையில் போங்கள்"என்று சொன்னார்கள். சாப்பிட சொன்னர்கள்.சாப்பிட்டேன். வெளித்திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் விட்டிற்குள்ளே கட்டிலில் படுக்கசொல்லி ஒரு போர்வையை தந்தார்கள்.அவர்களுக்கோ எழுபது வயதிருக்கும்.அவர்களால் கீழே தரையில் படுக்க முடியாது என்பதால் "நான் வெளித்திண்ணையில் படுத்துகொள்கிறேன்" என்று திண்ணைக்கு வந்தேன். அவர்கள் விடவில்லை. "உள்ளே கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள்" என்று பிடிவாதமாக சொன்னதால் சரிஎன்று  உள்ளே போய் போர்வையை கட்டிலில் விரித்தேன். அப்பொழுது அந்த அம்மா "நீங்கள் என்ன வர்ணம்" என்று கேட்டார்கள். நான் போர்வையைத்தான் என்ன கலர் என்று கேட்கிறார்கள் என்று நினைத்து "பச்சை" என்று சொன்னேன். 

                                 அவர்கள் இருவரும் சிரித்தார்கள். "சரி படுத்துக்கொள்ளுங்கள்" என்றார்கள். அவர்கள் ரொம்பவும் மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தியது எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள். காலையில் எழுந்து முதல் பஸ்ஸுக்கே திருசெந்தூர் சென்று அங்கிருந்து ஆறுமுகநேரி சென்றேன்.  ஆனால் சில வருடங்கள்  கழித்துதான் அவர்கள் கேட்ட வர்ணத்தின் அர்த்தம் புரிந்தது. 

இரண்டாவது பிரசவம்!

                        ஆறுமுகநேரியில் மனைவியை பார்த்துவிட்டு அன்று அங்கே தங்கினேன். அப்பொழுது என் மனைவி "மருத்துவச்சியம்மா நேற்று வந்தார்கள் இன்னும் ஒரு வாரத்தில் பேறுகாலம்  இருக்கும் என்று சொன்னார்கள் நீங்கள் லீவு எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்றாள். சரியன்று மறுநாள் காலையில் புறப்பட்டு அம்பாசமுத்திரம் வந்தேன். ஆய்வாளரை சந்தித்து அவர்கள் அம்மா அப்பா நலமுடன் இருப்பதாக சொன்னேன். "மேலும் மனைவிக்கு பேறுகாலமாக  இருப்பதால் ஒரு வாரம் லீவு வேண்டும்" என்று கேட்டேன். "சரி சென்றுவாருங்கள்" என்று சொல்லிவிட்டார். காவல்நிலையத்திற்கு  வந்து லீவு லெட்டர் கொடுத்துவிட்டு ஆறுமுகனேரிக்கு வந்தேன்.

                      ஆறுமுகநேரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு சென்றேன்.அங்கே சித்தப்பா, சித்தி எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான் போய் அம்மாவிடமும், அண்ணனிடமும் சொல்லிவிட்டு அன்று மீளவிட்டானில் தங்கினேன். தம்பி ராமலிங்கம் ரயில்வேயில் கலாசியாக  வேலைபார்த்தான். மிளவிட்டானிலிருந்து மற்ற பையன்களும் கூட வேலை செய்வதால் அவர்களுடன் ரயில்வே ஸ்டேசனிலேயே தங்கிகொள்வான். மறுநாள் புறப்பட்டு ஆறுமுகநேரி வந்தேன்.
   
மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

                                   8.11.1967 காலையில் வீட்டிலேயே மனைவிக்கு ஆண் குழந்தை (முத்துகுமரன்) பிறந்தது. சுகப்பிரசவம். மருத்துவச்சி அம்மா, "குழந்தை பிறந்தது முதல் அழவில்லை" ன்று சொன்னார்கள். உடனே நான் "டாக்டரை கூட்டிவருகிறேன்" என்று சொன்னேன். "வேண்டாம் சரியாகிவிடும் சற்று நேரம் கழித்து குழந்தை அழும்" என்று சொன்னார்கள். ஏற்கனவே முதல் குழந்தையும் இறந்துவிட்டதால்  எனக்கு மனம் கேட்கவில்லை.
                                                                                                    அப்போது........     

Saturday 5 November 2011

அம்பாசமுத்திரத்தில் வாழ்க்கை!

அப்போது....
                   
                          என் மனைவி ஆறு மாதம்  கர்ப்பமாகயிருந்தாள். எனக்கு  மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியை நல்லமுறையில் கவனித்து கொண்டேன். என் அம்மாவும் நன்றாக கவனித்து கொண்டார்கள். 

இறந்த குழந்தை!

                          அந்த தெருவில் கோர்ட்டில் அமீனாவாக வேலைபார்த்த திரு சாமிநாதன் அவர்கள் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவர் மனைவி சொந்த ஊர் நாங்குநேரி. அவர் எங்களிடம் மிகவும் அன்பாகவும் இருப்பார்கள். அவர் மனைவி திருமதி அம்மாகுட்டி, குழந்தைகள் வரதன் மற்றுமொரு குட்டிபையன் இருந்தான். அவர் ஒரு தூரத்து சொந்தமானதால் என் மனைவியை தன் சொந்த மகளாகவும் என்னை மருமகனாகவுமே எண்ணி பழகினார். ஆகையால் எங்களுக்கு ரொம்ப  உதவியாக இருந்தது.

                               சிறிது நாளில் என்மனைவிக்கு ஏழாவது மாதத்தில் குறைபிரசவமானது. குழந்தை இறந்தே பிறந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் மனைவி மிகவும் பாதிக்கப்பட்டாள். மனதளவிலும் உடலளவிலும். ஊரிலிருந்து மனைவியின் அம்மா, அப்பா எல்லோரும் வந்தார்கள். எனது மாமியார் பத்து நாட்கள் கூடவேஇருந்தார்கள். அவர்கள் ஊருக்கு போகும்போது வேறு வீடு  பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றார்கள். உடனே ஒரு வாரத்தில் பெரியகுளம் தெருவில் திரு சிவனு ஏட்டய்யா அவர்கள் வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு தந்தார்கள். அந்த வீடு நல்ல வசதியாக இருந்தது. 

கடமை உணர்வு!

                                  1967 ஜூன் மாதம் குற்றாலம் சீசன் பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்பினார்கள். அந்த சமயம் அம்மாவும் ஊருக்கு போய்விட்டதால் மனைவியையும் என்னுடன் குற்றாலத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு காவலர்கள் தங்குவதற்கு ஒரு மடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனைவியுடன் அந்த மடத்திலேயே தங்கி இருந்தோம். மற்றும் சில காவலர்களும் குடும்பத்தினர்களுடன் வந்திருந்தார்கள்.அவர்களும் அந்த மடத்திலேயே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாட்கள் அங்கு டுட்டி என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கலாம் என்று மனைவி சொன்னதால் ஒரு லாட்ஜுக்கு சென்று  தங்கினோம். 

மறதி!

                ஒருநாள் சிற்றருவியில் குளித்துவிட்டு காவல்நிலையம் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். அன்று எனக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவலர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டிய டுட்டி. ஆகையால் மனைவியை சற்று ரோட்டோரமாக "நில்லு நான் காவல்நிலையம் சென்று யார்யாருக்கு என்ன பணி நியமிக்கவேண்டும் என்று எனது உதவியாளர் காவலருக்கு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு காவல்நிலையம் சென்றேன்.

                              அங்கு காவலர்கள் கூட்டமாக நின்று பணி நியமனத்திற்கு முண்டியடித்து  கொண்டிருந்தார்கள். அப்பால் அவர்களை சமாதானப்படுத்தி வரிசையாக டுட்டி நியமியுங்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். ரோட்டோரமாக தண்ணீர் சொட்ட சொட்ட நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த என் மனைவியை ஒரு காவலர் பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார். அப்பொழுதுதான் அவளை அங்கே நிறுத்திவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனே எனது அசிஸ்டன்ட் காவலரை டுட்டி நியமிக்க சொல்லிவிட்டு ஓடி வந்தேன். மனைவியிடம் "சாரி" சொல்லிவிட்டு லாட்ஜிக்கு வந்தோம். பதினைந்து நாட்கள் டுட்டி முடிந்து அம்பாசமுத்திரம் வந்தோம்.

சுற்றுலா செல்லும் குழந்தைகள்!

                            ஒருநாள் பிரம்மதேசம் என்ற ஊரில்  தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் மணிமுத்தாறு  அணையை பார்க்க பள்ளி குழந்தைகளை அழைத்து செல்கிறோம். நீங்களும்  வாருங்கள் போய் வரலாம் என்று சொன்னார். மனைவியும் விரும்பியதால் சரி என்று சொன்னேன். அவர்களை டூர் அனுப்பிவிட்டு "நீங்கள் மணிமுத்தார் போங்கள் நான் மத்தியானம் காவல்நிலையத்தில் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். ஆனால் காவல்நிலையம் சென்றவுடன் அங்கிருந்த சூழ்நிலையில் மணிமுத்தார் போகவேண்டு மென்பதையே மறந்துவிட்டேன். அங்கு கஜானா பாதுகாப்பு பணியிலிருந்த தலைமைக்காவலர் திரு ஆதினம் அவர்களை மாற்றி நான் பாதுகாப்பு பணியிலிருக்க  வேண்டியதாகிவிட்டது. மத்தியானம் சாப்பாட்டைஓட்டலில் வாங்கிவரச்சொல்லி சாப்பிட்டேன்.

                              மாலையில் பணி மாற்றப்பட்டு வீட்டிற்கு போனபோதுதான் மனைவி டூர் போய் வந்தாள். அப்பொழுதுதான் அவள் டூர் போனதே நினைவுக்கு வந்தது. கோபமாக ஒரு முறை முறைத்து பார்த்தாள். சமாதானம் சொல்லி சமாளித்தேன். இதெல்லாம் எனது ஞாபகசக்தி மறதியினால் அல்ல. வேலையில் அக்கறையும்,கடமை உணர்வும்தான். நான் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டால் வீட்டு ஞாபகம் என்பதே எனக்கு இருந்ததில்லை.

                              மேலும் என் மனைவி சொன்னாள் "பள்ளிக்குழந்தைகளை டீச்சர்கள் கவனிப்பதேயில்லை. அதுகள் இஸ்டத்திற்கு ஆபத்தான இடங்களுக்கும் போய்விடுகிறது. அதை யாரும் கவனிப்பதுமில்லை கண்டிப்பதுமில்லை" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள். அந்த பயம் இப்பொழுதும்  இருப்பதால் நாங்கள் எங்கள் குழந்தைகளை அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் வரை டூர் அனுப்பியதே கிடையாது.

தங்கைக்கு முதல் குழந்தை!


                               அம்பாசமுத்திரத்தில் இருந்த போது ஒருநாள் தங்கை பாப்பாவுக்கு பெண்  குழந்தை பிறந்ததாக தகவல் வந்தது. நானும் எனது மனைவியும் பார்த்து விட்டு வருவதற்காக சென்றோம். அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்று கூறினார்கள்.
                                                                               அப்போது.......