அப்போது
அதனால் பஸ் ஓடவில்லை . வெளியூர் பஸ்கள் மிகவும் தாமதமாகவே புறப்பட்டது . தூத்துக்குடி வந்து சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு மீளவிட்டான் வந்தேன். அம்மாவுக்கு ரொம்பவே சந்தோசம் .
ஏழு நாட்கள் லீவு முடிந்து திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிக்கு ஆஜரானேன் . அப்பொழுதே எனக்கு திருநெல்வேலி ஜங்சன் பாலம் காவல் நிலையத்திற்கு பணி நியமிக்கப்பட்டது . வுதவி ஆய்வாளர் திரு சார்லஸ் என்பவர் ரொம்பவும் நல்லவர் . அவர் ஆங்கிலோ இந்தியன் . ஒரு வாரத்தில் கிக்கிரகுளம் என்ற இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து அம்மாவை அழைத்து வந்தேன் . இரண்டு மாதத்தில் காவலர் குடியிருப்பில் எனக்கு வீடு கிடைத்து விட்டது . காவல் நிலையத்திற்கு பின்னாலேயே வீடு . பக்கத்துக்கு வீடுகளில் நல்ல நண்பர்கள் . திருக்க்கரன்குடி திரு மகாதேவன் , குரும்பூர் தோணிபாலம் திரு இசக்கிமுத்து ஆகியோர்கள் இருந்தார்கள் .
திரு மகாதேவன் தனது இரண்டு தங்கைகள் அற்புதமணி , கங்கா ஆகியோருடன் இருந்தார் . கங்கா 5 வது வகுப்பு படித்து வந்தாள் . சில நாட்களில் அவளை நான் சைக்கிளில் கொண்டுபோய் பள்ளியில் விட்டு வருவேன் . அப்பொழுது, "அவளிடம் நீ நன்றாக படித்து பெரிய வேலைக்கு போகும்போது உன் அண்ணனை மறந்துவிடாதே நன்றாக கவனித்துகொள்!" என்று சொல்வேன். பின்னாளில் திரு மகாதேவன் தனது தங்கைகள் அருப்புதமணியை களக்காடு திரு கனகருக்கும் , கங்காவை வள்ளியூர் திரு வரதாஸ் ஆசிரியருக்கும் திருமணம் செய்துவைத்தார் . அந்த கங்கா பின்னாளில் மாவட்ட கஜானாவில் குமாஸ்தாவகினாள் . அவள் மகன் அலெக்ஸ்மேனன் I.A.S. படித்து சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறான் . ஆனால் இந்த சந்தோசத்தை அவளால் காணமுடியவில்லை . அவள் மகள் சாத்தூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளாள்.
எழுத்தராக பதவி உயர்வு!
சில மாதங்களில் நிலைய எழுத்தர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது . நானும் அதில் கலந்து கொள்வதற்கு மனு எழுதிக்கொடுத்தேன் . அப்போது ஆய்வாளராக இருந்த திரு நடராஜன் என்பவர் எனது மனுவை எழுத்தர் தேர்வுக்கு சிபாரிசு செய்யவில்லை . இந்த விஷயம் சர்க்கிள் ரைட்டர் மூலமாக நான் தெரிந்துகொண்டேன் . உடனே தாழையுத்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு ஆண்டிபட்டி நடராஜன் அவர்கள் எனது பெரியப்பா திரு M.ஆண்டி அவர்களுக்கு நன்கு பழக்கம் உள்ளவர் .
அதனால் அவரிடம் போய் விஷயத்தை சொன்னேன் . அவர் உடனே எனது இன்ஸ்பெக்டருக்கு போன் மூலமாக "ராமசாமி எழுத்தர் தேர்வு மனுவை ஏன் சிபாரிசு செய்யவில்லை?" என்று கேட்டார் . அதற்கு அவர் "ராமசாமியின் நடத்தை அவர் திறமையைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியாது அவர் இந்த ஸ்டேசனுக்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அதனால் அவரைபற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை . இப்பொழுது நீங்கள் சொல்வதால் சிபார்சு செய்துவிடுகிறேன்" என்று சொல்லி சிபார்சு செய்துள்ளார் . உடனே திரு ஆண்டிபெட்டி நடராஜன் அவர்கள் என்னிடம் "அவர் சிபார்சு செய்துவிடுவார். நீ நன்றாக தேர்வு எழுது" என்று ஆசீர்வாதம் செய்து அறிவுரைகள் சொல்லி என்னை ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
ஒரு வாரத்தில் எழுத்தர் தேர்வில் கலந்துகொள்ள உத்தரவு வந்தது . தேர்வுக்கு சென்றேன் முதலில் கவாத்து தேர்வு வரிசையில் நிற்கும்போது ஆபீஸ் குமாஸ்தா வந்து சங்கரன் என்ற காவலரை உனக்கு நான்கு வருடம் பூர்த்தியாகவில்லை. ஆகையால் நீ கலந்து கொள்ளமுடியாது என்று அவரை வெளியேற்றினர் . நான் கவாத்தில் தேர்வு பெற்று எழுத்து தேர்விலும் தேர்வு பெற்றுவிட்டேன் . மாவட்டத்தில் நான்காவதாக தேர்வு பெற்றிருந்தேன்.
பத்து நாட்களில் நியமன உத்தரவு வந்தது. எனக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் எழுத்தராக நியமனம் செய்யபட்டிருந்தது . உடனே நண்பர்களிடம் விடைபெற்று அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டை காலிசெய்து சாமான்களையும் எடுத்துகொண்டு மீளவிட்டான் வந்தோம் . மறுநாள் தூத்துக்குடி போய் சித்தப்பாவிடம் சொன்னேன் . அப்பொழுது சித்தப்பா "அங்கே எனக்கு மிகவும் தெரிந்த ஏழான்கால் மாடசாமி என்பவர் இருக்கிறார் . அவரிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் . நாளைக்கே போகலாம்" என்று சொன்னார் .
அதன்படி மறுநாள் விஜயநாராயணம் சென்று திரு ஏழான்கால் மாடசாமி என்பவரை பார்த்து சித்தப்பா சொன்னார்கள் . அவரும் "தம்பி பயம் வேண்டாம் . நீ வா நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொன்னார் . அப்பால் உதவி ஆய்வாளர் திரு செய்யது ஷேரிப்புடீன் அவர்களை சந்தித்தோம். "அவர் சீக்கிரம் வந்து பணியில் சேருங்கள்" என்று சொல்லியனுப்பினார் . மணி இரவு பத்து மணியாகிவிட்டது . இதற்குமேல் பஸ் இருக்காதே என்று எண்ணிக்கொண்டு தெற்கு விஜயநாராயணம் சென்றோம் . அங்கே பஸ்கள் போய்க்கொண்டிருந்தது. அன்று வைகாசி விசாகம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது . இரவு 12 மணிக்கு திருச்செந்தூர் பஸ் கிடைத்தது . அதில் ஏறி திருச்செந்தூர் வந்தோம் . கோவில் கலையரங்கத்தில் சிறிது நேரம் தங்கி இருந்துவிட்டு அதிகாலை பூஜையில் கலந்துகொண்டு ஸ்ரீ முருகபெருமானை வணங்கி அவர் அருள் பெற்று ஊருக்கு புறப்பட்டோம் .
பெண் பார்த்தேன்!
நடந்தே ஆறுமுகநேரி செல்வரஜபுரம் வந்து ரயில்வே கேட் அருகில் ஒரு காப்பி ஹோட்டலில் காப்பி குடித்து கொண்டிருந்தோம் . அப்பொழுது சித்தப்பாவுக்கு தெரிந்த பாட்டி ஒருவர் அங்கு இருக்கிறார். அவர் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்தோம் . அப்பொழுது ப்ளுவூத் முத்தையா என்பவர் "அந்த பாட்டி இப்பொழுது இங்கில்லை" என்று சொல்லிவிட்டு என்னைப்பற்றி சித்தப்பாவிடம் விசாரித்தார் . தம்பிக்கு திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டு "இங்கே ஒரு நல்ல பெண் இருக்கிறது வாருங்கள் நான் காட்டுகிறேன்" என்று எங்களை பெண்கள் குளித்து கொண்டிருக்கும் ஒரு கிணற்றுக்கு கூட்டிச்சென்றார் . அப்பொழுது மூன்று பெண்கள் குளித்துவிட்டு தண்ணீர்குடம் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள் . "அதோ மூன்றவதாக ஒரு பெண் போகிறாளே அந்த பெண்தான்" என்று பின்பக்கமாக காட்டினார். "நீங்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிற்கு கூட்டிசெல்கிறேன். வாருங்கள்" என்று அந்த பெண்ணின் பக்கத்து வீட்டிற்கு கூட்டிசென்றார்.
அந்த பக்கத்து வீட்டு முத்தம்மாள் என்பவர் "அதோ சேலையை காயப்போட்டுக் கொண்டிருக்கிறாளே அவள்தான். அப்பவும் பின்பக்கம்தான் பார்க்கமுடிந்தது . முத்தம்மாள் அந்த பெண்ணிடம் " ராஜகனி எங்கள் வீடுவரை கொஞ்சம் வந்து உயரே பரணில் ஒரு சாமான் இருக்கிறது. எனக்கு எட்டவில்லை. நீ வந்து எடுத்து தந்துவிட்டு வா" என்று சொன்னாள். அது எங்களுக்கும் கேட்கிறது . ஆனால் அந்த பெண், " உங்கள் வீட்டில் ஆட்கள் சத்தம் கேட்கிறதே. யார் அவர்கள் ? நான் வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டாள். முத்தம்மாள் எவ்வளவோ எடுத்து சொன்னாள். "அது எங்கள் சொந்தக்காரர்கள். ஊரிலிருந்து வந்துள்ளார்கள். நீ தயவு செய்து வந்து எடுத்து கொடுத்துவிட்டு வாயேன் " என்று சொல்லி பார்த்தாள். ஆனால் அந்த பெண் வர மறுத்து விட்டாள். "நீங்கள் இன்னொருநாள் வாருங்கள். நான் அவர்கள் அப்பா அம்மாவிடம் சொல்லிவைக்கிறேன் . நல்ல இடம் ஆதனால் கட்டாயம் வாருங்கள்" என்று முத்தையாவும் சொன்னார் . அதனால் நானும் சித்தப்பாவும் நல்லூர் அக்கா வீட்டிற்கு போய்விட்டு ஊருக்கு போவோம் என்று ரயில்வே தண்டவாளத்தின் வழியாக நடந்தே போனோம் . அப்பொழுது பின்னால் ஒருவர், "அய்யா! அய்யா! " என்று எங்களை கூப்பிட்டுக்கொண்டே வந்தார்.
அப்போது ..........
No comments:
Post a Comment